மெட்ரோ ரயில் நிலையங்களை போல் நவீன நுழைவுவாயில்.. QR code அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே அனுமதி
சென்னை: அதிமுக பொதுக் குழுவுக்கு போலி உறுப்பினர்களின் வருகையை தடுக்கும் வகையில் QR code பொருத்தப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
அதிமுக பொதுக் குழு இன்று நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய ஓபிஎஸ் மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு சொல்லப்படுகிறது.
இது ஒரு புறமிருந்தாலும் பொதுக் குழுவுக்கான ஏற்பாடுகளை எடப்பாடி தரப்பினர் ஜரூராக செய்துள்ளனர். இந்த பொதுக் குழுவுக்கு 15 நாட்களுக்கு முன்பு அழைப்பிதழ் தரப்பட வேண்டிய நிலையில் தனக்கு 7 ஆம் தேதிக்கு முன்னர்தான் வழங்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

பொதுக் குழு
இந்த நிலையில் இன்று காலை முதலே பொதுக் குழு உறுப்பினர்கள் , செயற்குழு உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் என சென்னை வானகரத்தில் திரண்டு வருகிறார்கள். கடந்த முறை வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பால் தத்தளித்த எடப்பாடி பழனிச்சாமி தாமதமாகவே விழா மேடையை வந்தடைந்தார்.

தொண்டர்கள் உற்சாகம்
தொண்டர்களின் உற்சாக வரவேற்பால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதையடுத்து வேறு இடத்தில் இன்று நடைபெறும் பொதுக் குழுவுக்கு இடம் பார்க்க திட்டமிடப்பட்டது. முதலில் விஐபி ரிசார்ட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு அங்கு பணிகளும் தொடங்கின. எனினும் சில பிரச்சினைகளுக்காக அதிமுக பொதுக் குழுவை வானகரத்திலேயே நடக்க முடிவு செய்யப்பட்டது.

பிரம்மாண்ட மேடை
இந்த நிலையில் வானகரத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதலே உறுப்பினர்கள் திரண்டு வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டிலிருந்து பிரச்சார வாகனத்தில் புறப்பட்டுள்ளார். அவருக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

போலி உறுப்பினர்கள்
இந்த பொதுக் குழுவுக்கு போலி உறுப்பினர்களின் வருகையை தடுக்க அனைவருக்கும் புகைப்படத்துடன் கியூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையை சரி பார்க்க மெட்ரோ ரயில் நிலையங்களை போல் நவீன நுழைவுவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பினர்களின் அடையாள அட்டை ஸ்கேன் செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.












Click it and Unblock the Notifications