தேங்காய் பொறுக்குவதை தடுத்தார்.. கட்டையால் அடித்தேன்- செத்துட்டார்.. அந்தியூரில் பரபரப்பு
அந்தியூர்: அந்தியூரில் கோயிலில் சிதறு தேங்காய் பொறுக்க விடாமல் தடுத்ததை அடுத்து கட்டையால் அடித்து கொன்றேன் என்று கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற கொன்னமரத்து அய்யன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் காவலாளியாக உள்ளவர் வடிவேல் (50). கோபி அருகே உள்ள டிஎன் பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி (50).
இவர் போர்வை வியாபாரம் செய்து விட்டு இரவு நேரத்தில் கொன்னமரத்து அய்யன் கோயிலில் தூங்கிவிட்டு செல்வது வழக்கம். கடந்த 1-ஆம் தேதி நள்ளிரவு இவர்கள் இருவரையும் கோயில் பகுதியில் கட்டையால் அடித்து ஆத்தம்பாளையத்தைச் சேர்ந்த நல்லசாமி (50) என்பவர் கொலை செய்தார்.
போலீஸில் ஒப்படைப்பு
கொலை செய்து விட்டு ஆத்தம்பாளையத்துக்கு நடந்து சென்ற அவர் அந்த பகுதியை சேர்ந்த குமார் என்பவரிடம் ரூ. 200 கேட்டு தகராறு செய்ததுடன் அவரையும் கத்தியால் குத்திவிட்டு ஓடினார். அப்போது அவரை அப்பகுதியினர் சுற்றி வளைத்து பிடித்து அந்தியூர் போலீஸில் ஒப்படைத்தனர்.
கோயிலுக்கு
அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அளித்த பகீர் வாக்குமூலம் பின்வருமாறு, என் பெயர் நல்லசாமி. கட்டட தொழில் செய்து வருகிறார். எனது மனைவி ஜானா. எங்களுக்கு குழந்தைகள் கிடையாது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு என்னுடன் சண்டையிட்டு கொண்டு வீட்டை விட்டு சென்ற என் மனைவி திரும்ப வரவில்லை. இதனால் மனமுடைந்த நான் அவ்வப்போது கொன்னமரத்து கோயிலுக்கு சென்று சுவாமி கும்பிடுவேன்.
கோபம்
அந்த கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைப்பார்கள். அவ்வப்போது அவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிடுவேன். மேலும் பக்தர்கள் நேர்த்திக்காக உடைக்கும் சிதறல் தேங்காய் பொறுக்கி சாப்பிடுவேன். அப்போது சிதறல் தேங்காய்களை எடுக்கக் கூடாது என காவலாளி வடிவேல் என்னை தடுத்தார். இதில் எனக்கு கோபம் வந்தது. இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
பார்த்தார் கந்தசாமி
அதன்படி கடந்த 1-ஆம் தேதி நள்ளிரவு கோயிலுக்கு சென்றேன். அப்போது கோயில் முன்பு 3 பேர் போர்வை போர்த்தி கொண்டு தூங்கி க் கொண்டிருந்தனர். உடனே நான் அங்கிருந்த கட்டையை எடுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை அடித்தேன். அவர் சப்தம் போட்டுகொண்டு ஓடிவிட்டார். அப்போது இன்னொரு போர்வைக்குள் இருந்த வடிவேல் என்னை பார்த்ததும் அவரை அடித்துக் கொன்றேன். அப்போது இன்னொரு போர்வைக்குள் இருந்த கந்தசாமி என்னை பார்த்துவிட்டார்.
வழிப்பறி
இதனால் அவர் கொலை குறித்து வெளியில் கூறிவிடுவார் என பயந்து அவரையும் கொன்றேன். பின்னர் ஆத்தம்பாளையத்துக்கு சென்ற போது குமாரிடம் (45) ரூ. 200 கேட்டேன். அவர் மறுக்கவே அவரை கத்தியால் குத்தினேன். உடனே அவர் கத்தியதில் பொதுமக்கள் என்னை பிடித்து விட்டனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.