மாஜி அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக உருவாவதற்கு முக்கிய காரணமாக ஆர்.எம்.வீரப்பன் இருந்தார். இவர் 1977 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக இருந்தார். 1986 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் நெல்லை சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

அது போல் 1991 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கேயம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார். ஆர்.எம்.வீரப்பன் பாட்ஷா திரைப்படத்தை தயாரித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு இந்த படத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்துக்காக ஆர்.எம்.வீ கலந்து கொண்ட போதுதான் ஜெயலலிதாவுக்கு மட்டும் ஓட்டு போட்டால் இந்த தமிழகத்தை ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என ரஜினிகாந்த் பேசி பரபரப்பை கிளப்பினார்.
இந்த காரணத்திற்காகவே அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பனை கட்சியிலிருந்து நீக்கினார். இதையடுத்து ஆர்.எம்.வீரப்பன் எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 9ஆம் தேதி ஆர்.எம்.வீரப்பன் தனது 98ஆவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.
சென்னை திநகரில் உள்ள அவருடைய இல்லத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆர்.எம். வீரப்பனுக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.












Click it and Unblock the Notifications