சனாதன தர்மத்தில் ஜாதி பாகுபாடு கிடையாது! தீண்டாமையும் இல்லவே இல்லை.. ஆர்.என்.ரவி பேச்சு
சென்னை: சனாதன தர்மத்தில் ஜாதி பாகுபாடு கிடையாது, அனைவரும் ஒரே குடும்பம் என கருதுவதுதான் சனாதன தர்மம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதை அவர் வள்ளலாரின் விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை சார்பில் வள்ளலாரின் 202 ஆவது வருவிக்கவுற்ற பெருவிழா மற்றும் திருவருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடந்தது. இந்த விழாவில் அந்த உரை நூலை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட முதல் பிரதியை பாலகிருஷ்ணா தம்பையா பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில் எப்போதெல்லாம் தர்மம் தாழ்ந்து அதர்மம் தலை தூக்கிறதோ அப்போதெல்லாம் தெய்வம் மனிதனாக அவதரித்து நிலையை சரி செய்வது என்பதுதான் நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
அந்த வகையில் நம் நாடு மிகவும் கடினமான சூழலில் இருந்த போது அவதரித்த தெய்வம் வள்ளலார். நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்களின் ஞானத்தால் வெளிப்படுத்தியவர்கள் ரிஷிகள். இந்த உண்மையை வெவ்வேறு மொழி பேசிய வெவ்வேறு பழக்கவழக்கங்களைக் கொண்ட கலாச்சாரங்களை பின்பற்றும் மக்கள் உணர்ந்துள்ளனர்.
இவ்வாறுதான் பாரத நாடு உருவானது. யாரும் யாரை விடவும் உயர்ந்தவர்கள் இல்லை. அதே போல் யாரும் யாரைவிடவும் தாழ்ந்தவர்கள் இல்லை, எல்லோரும் சமம்தான். இதை ரிக் வேதம் கூறுகிறது. இதுதான் பாரத தர்மம். இதைத்தான் நாம் சனாதன தர்மம் என்கிறோம். ஆனால் உண்மையில் சனாதன தர்மம் என்பது ஜாதி பார்ப்பது அல்ல. யாராவது ஜாதி பாகுபாடு பார்த்தால் அது சனாதன தர்மமே இல்லை.
சனாதன தர்மம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்தும் ஒரே குடும்பம் என கருதுவதுதான் சனாதன தர்மம். இது எந்த பாகுபாட்டையும் ஏற்றுக் கொள்ளாது. தீண்டாமையும் ஜாதி பாகுபாடும் பார்ப்பது சனாதன தர்மம் அல்ல.
காலங்கள் மாறி வரும் நிலையில் மனித பலவீனங்களாலும் உள் பிரச்சினைகளாலும் சில நேரங்களில் வெளியில் வந்த அச்சுறுத்தல்களாலும் சனாதன தர்மம் மாறியிருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் தெய்வம் மனிதனாகப் பிறந்து நிலையை சரி செய்கிறது. இவ்வாற ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.












Click it and Unblock the Notifications