கிடுகிடு கொரோனா.. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் எப்போது அமலாகும்? சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம்
சென்னை: தடுப்பூசி போடாத நபர்கள் மூலமாக புதிய வகை கொரோனா தொற்று பரவும் வாய்ப்பிருப்பதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் குறித்தும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் சுகாதாரத் துறை செயலாளர் டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தொடர்ந்து ஒரு சில நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று
அதே போல் இந்தியாவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி மாநிலத்தில் தொற்று அதிகரித்து இருக்கிறது. தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு 90 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 200 ஆக உயர்ந்து வருகிறது.

சென்னையில் ஒரு நாள் கேஸ்கள்
அதே போல் சென்னையில் ஒரு நாள் தொற்று 100-ஐ தாண்டும் அளவு அதிகரித்து இருக்கிறது. ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இதன் தீவிரத்தை உணர்ந்து தமிழக முதல்வர் தொடர்ந்து நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

புதிய திரிபு தொற்று
அண்மையில் BA4, BA5 ஆகிய புதிய திரிபு தொற்றுதான் அதிகம் பதிவாகி வருகிறது. தடுப்பூசி போடாதவர்கள் மூலமே இந்த தொற்று பரவும் நிலை ஏற்படக் கூடும் என்பதால் வரும் மெகா தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது வரை 11.8 கோடி தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

கொரோனா பரவல்
போடாத நபர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்வது அவசியமாகும். தமிழகத்தில் கொரோனா பரவலை கையாள்வதற்கு மருத்துவமனை படுக்கை வசதிகள், ரெமிடஸ் மருந்து உள்ளிட்டவை கையிருப்பில் இருக்கிறது. ஆனாலும் தடுப்பூசி அவசியமானது. BA4, BA5 பாதிக்கப்பட்டவர்கள் கூட தடுப்பூசி போட்டவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள்.

முகக் கவசம்
எனவே முகக் கவசம், சமூக இடைவெளி அவசியமாக கடைப்பிடிக்க வேண்டும். 10 விழுக்காடு பாதிப்பு எந்த மாவட்டத்திலும் தற்போது இல்லை. பாதிப்பு அதிகமானால்தான் கட்டுப்பாடுகள் தேவையா என்பதை வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து அறிவிப்பார்கள் என ஜெ ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications