முடிவை மாற்றிய ராகவா லாரன்ஸ்.. விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைகோர்க்கிறார்? நாளை மறுநாள் அறிவிப்பு
சென்னை: திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டி என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில், இது குறித்து நாளை (ஜூன் 11) பதில் அளிப்பதாக கூறியிருந்த நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முடிவை மாற்றியுள்ளார். இயக்குநர் பாரதிராஜா மறைவு காரணமாக, தனது அடுத்த கட்ட பயணம் குறித்து ஜூன் 12 ஆம் தேதி அறிவிப்பதாக கூறியுள்ளார்.
அதன்படி, ஜூன் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு அரசியல் பிரேவசமா? அல்லது சினிமாவில் தொடர்வேனா? என்பது குறித்து அறிவிக்கிறார் ராகவா லாரன்ஸ். இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. தவெக தலைவரும், முதல்வருமான சி. ஜோசப் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதனையடுத்து அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
இத்தகைய பரபரப்பான அரசியல் களத்தில் இத்தொகுதியைக் கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய 3 பேர் கொண்ட பட்டியல் விஜய்யிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்தச் செய்திகளுக்கு விளக்கமளிக்கும் வகையில், ஜூன் 11 அன்று காலை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவையொட்டி நாளை அறிவிக்க இருந்த முக்கிய முடிவை ஒரு நாளைக்கு தள்ளிவைப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைவருக்கும் வணக்கம், 11-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9:30 மணிக்கு எனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கிய முடிவை அறிவிப்பதாக நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.
தற்போது பாரதிராஜா சார் மறைவால் திரையுலகமே துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த இழப்பு, குடும்பத்தில் ஒருவரை இழந்தது போன்றதொரு தனிப்பட்ட துயரமாக எனக்குத் தோன்றுகிறது. பாரதிராஜா சார் மீதும், சினிமாத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பின் மீதும் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, எனது அறிவிப்பை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மேலும் ஒரு தகவலும் றெக்கை கட்டிப் பறந்து வருகிறது. ராகவா லாரன்ஸ், அண்ணாமலையின் இயக்கத்தில் இணைய போகிறார் என்ற மற்றொரு தகவல் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட ஆலோசித்து வருகிறாராம். பெருந்துறை தொகுதியில் அண்ணாமலையும் திருச்சி கிழக்கு தொகுதியில் ராகவா லாரன்ஸும் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications