சிக்ஸர்.. தவற விட்ட மோடி அரசு.. தட்டி தூக்கிய ஸ்டாலின்! அசரடிக்கும் "டீம் 5.." வந்தார் ரகுராம் ராஜன்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு இன்னொரு சிக்சரை இன்று விளாசியுள்ளது. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் போல, மைதானத்தை தாண்டிப் போய் விழுந்துள்ளது பந்து. செமையான டீம் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஸ்டாலின்.
ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் சட்டசபை கூட்டத் தொடரின் முதல் நாளில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது அவர் வெளியிட்ட ஒரு அறிவிப்புதான் இந்த வரவேற்புக்கும், ஆரவாரத்திற்கும் காரணம்.

பொருளாதார குழு
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற எஸ்தர் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பொருளாதார நிபுணர்கள் அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் ட்ரீஸ், எஸ்.நாராயணன் ஆகிய ஐந்து தலை சிறந்த பொருளாதார நிபுணர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை நிபுணர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்பதுதான் அந்த அறிவிப்பு.

ஜெயரஞ்சன் நியமனம்
சமீபத்தில், மாநில வளர்ச்சி குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சன் நியமனம் செய்யப்பட்டபோது எழுந்த ஆரவாரத்தை விட இப்போது அதிக வரவேற்பு எழுந்துள்ளது. அதிலும் ரகுராம் ராஜன் நியமனம் ரொம்பவே முக்கியமானது. பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் அதி முக்கியமானது.

ஆர்பிஐ ஆளுநர் ரகுராம் ராஜன்
ரகுராம் ராஜன், பொருளாதார அறிஞர் மட்டும் கிடையாது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ற மிகப்பெரிய பதவியில் இருந்தவர். 2013ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2016ம் ஆண்டு செப்டம்பர் வரை, இவர் ஆர்பிஐ ஆளுநராக இருந்தார். 2003 முதல் 2006 வரை, சர்வதேச நாணய நிதியம் (IMF) இயக்குநர் மற்றும் தலைமை பொருளாதார வல்லுநராக இருந்தார். இப்படி மிகப்பெரிய அனுபவ அறிவு கொண்டவர் ரகுராம் ராஜன். அவர் கடனால் தத்தளிக்கும் தமிழ்நாட்டின், பொருளாதார ஆலோசனைக் குழுவிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடியை சமாளித்தவர்
பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன் கடந்த 2007-08 ஆம் வருடம் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடியையே சாமர்த்தியமாக சமாளித்து பல ஆலோசனைகளை அளித்தவர். ஏற்கனவே நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் தேர்ந்த கல்வியாளர். பொருளாதாரம் படித்தவர். பல சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அவரோடு ரகுராம் ராஜன் கைகோர்க்கும்போது, அந்த யோசனைகள் தமிழகத்தை அடுத்தகட்டத்திற்கு முன்னேற்ற உதவும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

நிதியை பயன்படுத்த ஆலோசனை
தமிழகம் எப்போதுமே, சமூக நீதி, கடையனுக்கும் கடைத் தேற்றம் என்ற கொள்கை கொண்ட மாநிலம். எனவே மக்களுக்கு விலையில்லா பொருட்கள் என்ற பெயரில் வசதி வாய்ப்புகள் செய்து தரப்படும், ரேஷன் கடைகளின் சிறந்த கட்டமைப்பை பயன்படுத்தி, பொருட்கள் மட்டுமின்றி, பணத்தையும் வழங்கும் அளவுக்கு முன்னேறியுள்ளோம். இவற்றுக்கான நிதியாதாரங்களை பாதுகாப்பதோடு, நிதிச் சிக்கலை தீர்க்க ரகுராம் ராஜனின் பரந்து விரிந்த அனுபவம் பலன் தரும்.

அரசியல் முக்கியத்துவம்
பொருளாதார ரீதியாக ரகுராம் ராஜனின் நியமனம் முக்கியத்துவம் என்றால், அரசியல் ரீதியாகவும் இந்த நியமனம் முக்கியத்துவத்தோடு பார்க்கப்படுகிறது. ஏனெனில், 2014ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, ரகுராம் ராஜனின் கொள்கைகள், வழிகாட்டுதல்களை ஏற்க மறுத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ரகுராம் ராஜன் ராஜினாமா
இந்த நிலையில் ஆர்பிஐ ஆளுநர் பதவியிலிருந்து ரகுராம் ராஜன் ராஜினாமா செய்தார். அவருக்கு பாஜக அரசு நெருக்கடி கொடுத்ததாக காங்கிரஸ் பகிரங்கமாக குற்றம்சாட்டியது. பதவியை ராஜினாமா செய்த பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்கினார் ரகுராம் ராஜன். இருப்பினும், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை அவர் தொடர்ந்து விமர்சித்துதான் வருகிறார். மத்திய அரசு தனது தேர்தல் வெற்றிக்கு பிறகு, அரசியல் மற்றும் சமூக கொள்கைகளை நிறைவேற்றத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார் ரகுராம் ராஜன்.

மோடி அரசுடன் முரண்
பண மதிப்பிழப்பு, சரியான அமல்படுத்தப்படாத ஜிஎஸ்டி போன்றவை இந்திய பொருளாதாரத்தின் வேகத்தை குறைத்துவிட்டதாகவும் ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியிருந்தார். ஜெயரஞ்சனும், மத்திய அரசின் பொருளாதார கொள்கையால்தான் நாடு இப்படி பாதிப்புகளை சந்தித்து வருகிறது எனக் கூறி வருபவர்தான்.

விமர்சன சாட்டை
நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ அபிஜீத் பானர்ஜியின் மனைவியாகும். ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம் மட்டுல்ல, அபிஜீத் பானர்ஜியும், மோடி அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் செய்பவர்கள்தான். ஜெயரஞ்சனும் அப்படித்தான். இவர்கள் அனைவரும், தமிழக அரசின் பணியில் தங்களை ஈடுபடுத்துவது, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு நேர் எதிராக தமிழ்நாடு பயணிக்கப்போவதற்கான முன் அறிவிப்பு என்று பார்க்கப்படுகிறது. இதனால்தான் ரகுராம் ராஜன் நியமனம், அரசியல் ரீதியாகவும் அதிர்வுகளை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

யார் இவர்கள்?
பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றவர்கள் குறித்த சிறு அறிமுகம்:
- ரகுராம் ராஜன்- ஆர்பிஐ முன்னாள் ஆளுநர்.
- எஸ்தர் டஃப்லோ- நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர், பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜியின் மனைவி.
- அரவிந்த் சுப்பிரமணியன்- இந்தியாவின் முன்னாள் பொருளாதார ஆலோசகர்.
- எஸ். நாராயணன்- இந்தியாவின் முன்னாள் நிதித்துறை செயலர்.
- ஜான் த்ரே- பொருளாதார நிபுணர், ஏழ்மை மற்றும் எளியவர்கள் குறித்த பார்வை கொண்டவர். அமர்த்தியா சென் உடன் இணைந்து உட்பட பல புத்தகங்களை எழுதியவர். தாராளமயமாக்கல் கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.












Click it and Unblock the Notifications