சர்வாதிகாரம்..ஜனநாயகப் படுகொலை..மோடி அரசுக்கு ஏன் இந்த அவசரம்..கனிமொழி கடும் தாக்கு
சென்னை: இது ஜனநாயகப் படுகொலைக்கு சமமான ஒன்று. இது தன்னை எதிர்த்து கருத்து சொல்லும் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் ஆளும் அரசு செயல்படுகிறது என்று திமுக எம்.பி கனிமொழி கருத்து கூறியுள்ளார். ராகுல்காந்தி இதை எதிர்த்து வெற்றி பெறுவார் என்று கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் நீதிமன்றம் விசாரணை நடத்தி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பை வெளியிட்டது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி அறிவித்தார்.
எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் குற்ற வழக்குகளில் 2 அல்லது 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியை பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (3)-ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி பதவி நீக்கம்
அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை உறுப்பினர் பதவி மற்றும் வயநாடு தொகுதி எம்பி. பதவியையும் பறித்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு காங்கிரஸ் கட்சித்தலைவர்களும், கூட்டணி கட்சித்தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்
ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, சர்வாதிகாரிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். மோடி அரசாங்கம் அப்படித்தான் செய்து கொண்டுள்ளது. தங்கள் புதைகுழியை தோண்டுவதில் அவர்கள் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து விட்டனர். ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது முற்றிலும் தவறான நடவடிக்கை. இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஏன் என்றும் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக நாட்டில் இவ்வளவு அவசரம் எதற்கு? மக்கள் மன்றம் நல்ல தீர்ப்பு தரும் என்றும் அழகிரி கூறியுள்ளார்.

கனிமொழி கடும் தாக்கு
ராகுல்காந்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கருத்து கூறியுள்ள திமுக எம்.பி கனிமொழி, இவ்வளவு அவசரமான நடவடிக்கை யார் மீதும் எடுத்தது இல்லை. இது ஜனநாயகப் படுகொலைக்கு சமமான ஒன்று. இது தன்னை எதிர்த்து கருத்து சொல்லும் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் ஆளும் அரசு செயல்படுகிறது. ராகுல்காந்தி இதை எதிர்த்து வெற்றி பெறுவார்.

எல்லோருக்கும் இதே வேகம் வேண்டும்
இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடு. நீதிமன்றத்தை அணுகு மேல் முறையீடு செல்வார்கள் என்று கூறினார். சட்டம் எல்லோருக்கும் சமம்தான் என்றாலும் இது பாரபட்சமாக செயல்படுகிறது. எல்லா விசயத்திலும் இதே வேகத்தோடு செயல்பட வேண்டும். ஏன் இத்தனை வேகம் என்பதுதான் எங்கள் கேள்வியாகும். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவரையும் ஒன்றிணைத்து சரியான பதிரை தருவோம்.

திருநாவுக்கரசர்
இது திட்டமிட்டு நடத்தப்படுகிறது காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறினார். இது மாஜிஸ்திரேட் தீர்ப்புதான். அவசர கோலத்தில் தீர்ப்பு அளித்து தகுதி நீக்கம் செய்துள்ளனர். உடனே பதவியை பறித்தது ஏன்? இவ்வளவு அவசரமாக தீர்ப்பு வெளியானது ஏன்? ராகுல்காந்தி லோக்சபாவில் பேசிய கருத்துக்கள்தான் இதற்குக் காரணம். திட்டமிட்டு இந்த காரியத்தை மோடி அரசு செய்துள்ளது. சர்வாதிகார மனோபாவத்துடன் செய்துள்ள கொடூரமான செயல் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த போராட்டம் தொடரும். ராகுல்காந்திக்கு ஆதரவாக மக்கள் இருப்பார்கள். இது தற்காலிகம்தான். ராகுல்காந்தி மீண்டு எழுவார் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார். சாதாரண பேச்சுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்றும் திருநாவுக்கரசர் கேட்டார்.












Click it and Unblock the Notifications