நம்பர் 1 டிரெண்ட்.. தேசிய அளவில் தமிழ்நாட்டை திரும்பி பார்க்க வைத்த ராகுல்.. வடஇந்தியர்கள் விவாதம்!
சென்னை: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் லோக்சபா பேச்சை தொடர்ந்து தேசிய அளவில் தமிழ்நாடு என்ற வார்த்தை குறித்த விவாதம் நடந்து வருகிறது. முக்கியமாக வடஇந்தியர்கள் பலர் தமிழ்நாடு குறித்து விவாதம் செய்து வருகிறார்கள்.
Recommended Video

நேற்று நாடளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியது மிகப்பெரிய கவனம் பெற்றுள்ளது. மாநில சுயாட்சி, ஒன்றிய அரசியல், விவசாய போராட்டம், மத்திய அரசின் அதீத அதிகாரம், பொருளாதார சமமின்மை, பட்ஜெட் குளறுபடி என்று பல விஷயங்கள் குறித்து ராகுல் காந்தி தனது உரையில் பேசினார்.
ராகுல் காந்தியின் பேச்சில் முத்தாய்ப்பாக அமைந்த விஷயம் என்றால் அது தமிழ்நாடுதான்.. தமிழ்நாட்டை உங்களால் கடைசி வரை ஆளவே முடியாது.. உங்கள் வாழ்நாளில் அது நடக்கவே நடக்காது என்று பாஜகவை பார்த்து ராகுல் காந்தி பேசினார்.

நான் தமிழன்தான்
அதோடு நின்று விடாமல் லோக்சபாவிற்கு வெளியே செய்தியாளர் சந்திப்பில்.. ஏன் உங்கள் பேச்சில் தமிழ்நாடு பற்றி அதிகம் கூறுகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு.. ஏன்னா நானும் தமிழன்தான் என்று ராகுல் காந்தி பதில் அளித்தார். அவரின் இந்த பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு என்ற ஒற்றை வார்த்தை ட்விட்டர் டிரெண்டில் டாப்பில் இருந்து வருகிறது. வடஇந்தியர்கள் பலர் இந்த டேக்கிற்கு கீழ் ட்வீட் செய்து வருகிறார்கள்.

விவாதம்
வடஇந்திய அரசியல் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் பலர் ராகுல் காந்தியின் இந்த பேச்சை பகிர்ந்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசியல் ஏன் மாறுபட்டது. தமிழ்நாடு ஏன் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணையாமல் மாநில சுயாட்சிக்கு முன்னுரிமை கொடுக்கிறது என்று பலர் இதில் விவாதங்களை செய்து வருகிறார்கள். அதேபோல் ஒன்றியம், மாநிலம் என்ற வார்த்தைகளும் இதனால் இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

ஒன்றியம்
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். அப்படி இருப்பதே இந்தியாவின் ஒற்றுமைக்கு நல்லது. இதை மன்னராட்சி போல ஒற்றை ஆட்சிக்கு கீழ் கொண்டு சென்றால் அதை பெரிய பிளவிற்கு வழி வகுக்கும் என்றும் பலர் இணையத்தில் ட்வீட் செய்து வருகிறார்கள். அதாவது தமிழ்நாட்டில் திமுக முன்னெடுத்த ஒன்றிய அரசு என்ற வாதம் தேசிய அளவில் ராகுல் காந்தி பேச்சால் தற்போது விவாதப் பொருள் ஆகியுள்ளது. ஒன்றியம் - மத்திய என்ற வார்த்தைகளை வைத்து பலர் விவாதம் செய்ய தொடங்கி உள்ளனர்.

தமிழ்நாடு விவாதம்
பாஜக தலைவர்கள் ராகுல் காந்தியின் இந்த பேச்சை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்தியாவை ஒன்றியம் என்று அழைப்பது தவறு.. இந்தியா என்பது தேசம் என்று அமித் மால்வியா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதேபோல் தமிழ்நாட்டை பாஜக ஆளவே முடியாது என்று சொல்வதை ஏற்க முடியாது. ஏற்கனவே தமிழ்நாட்டில் பாஜக எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். விரைவில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியும் அமையும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

நம்பர் 1
ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஒரு பக்கம் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. இன்னொரு பக்கம் அவரின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகளும் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாடு பற்றி பலர் இணையத்தில் பேசி பேசி "Tamil Nadu" என்ற வார்த்தை தேசிய அளவில் டிரெண்டிங்கில் நேற்று இரவு முழுக்க முதல் இடத்தில நீடித்தது. தற்போதும் "Tamil Nadu" டிரெண்டிங்கில் இருக்கிறது. முக்கியமாக பிற மாநிலத்தவர் மத்தியில் இது விவாதமாக எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications