என் அண்ணன் ‛பப்பு’வா? ராகுல் யார் தெரியுமா? படிப்பை பட்டியலிட்டு பாஜகவை விளாசி தள்ளிய பிரியங்கா
டெல்லி: லோக்சபா எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று டெல்லியில் தடையை மீறி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேளையில் ராகுல் காந்தியை பாஜகவினர் பப்பு என அழைக்கும் பாஜகவினரை அவரது தங்கை பிரியங்கா காந்தி விளாசினார். மேலும் ராகுல் காந்தி படித்ததை சுட்டிக்காட்டி பாஜகவினரை அவர் கடுமையாக சாடினார்.
மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்க 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. இதற்கிடையே ராகுல் காந்தி நேற்று முன்தினம் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.

அனுமதி கொடுக்காத போலீஸ்
இந்நிலையில் தான் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி அறவழியில் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தது. அதன்படி டெல்லியில் ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சா்பில் சங்கல்ப் சத்தியாகிரஹம் எனும் பெயரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு இன்று போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.

தடையை மீறி உண்ணாவிரதம்
மேலும் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இடத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் காங்கிரஸ் தலைவர்கள் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர்களான பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்பட பல தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

ராகுல் பற்றி பேசிய பிரியங்கா
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பிரியங்கா காந்தி கடுமையாக பாஜகவினரை தாக்கி பேசினார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்தார். இதுபற்றி பிரியங்கா காந்தி பேசியதாவது: என் அண்ணன் ஹார்வர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழங்களில் பட்டப்படிப்புகளை படித்து முடித்துள்ளார். இந்த பல்கலைக்கழங்கள் உலகில் தலைசிறந்தவையாக உள்ளன. ஆனாலும் எனது அண்ணனை‛பப்பு' என அழைக்கிறார்கள். பாரத் ஜோடோ யாத்திரையில் அவருடன் பல லட்சம் மக்கள் நடந்து வந்ததை பார்த்து அவர் பப்பு இல்லை என்பதை பாஜகவினர் உணர்ந்துள்ளனர்.

பதில் அளிக்க முடியாதவர்கள்
ராகுல் ஏழை மக்களின் உணர்வுகளையும், பிரச்சனைகளையும் புரிந்து பேசி வருகிறார். இதனால் அவரை பார்த்து பாஜகவினர் பயப்படுகின்றனர். மேலும் நாடாளுமன்றத்தில் பதில் அளிக்க முடியாத வகையில் ராகுல் காந்தி கேள்விகள் கேட்டார். என் சகோதரரை பார்த்து பயந்தவர்கள் தான் அவரை நாடாளுமன்றத்துக்குள் வரவிடாமல் செய்வதற்காகவே தகுதி நீக்கம் செய்துள்ளனர். '' என சரமாரியாக விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications