திடீர் திருப்பம்.. கூடப்பிறந்த தங்கையே! சைதாப்பேட்டை ரயில் நிலைய பெண் வியாபாரி கொலையில் 5 பேர் கைது!
சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி ராஜேஸ்வரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜேஸ்வரியின் தங்கை உட்பட ஐந்து பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் இந்திரா நகரில் வசிப்பவர் ராஜேஸ்வரி (34). இவர் ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த ஜுலை 19ஆம் தேதி இரவு தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது, அதிலிருந்து ராஜேஸ்வரி இறங்கி 1 மற்றும் 2-வது நடைமேடைக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை மர்ம நபர்கள் சிலர் பின் தொடர்ந்து கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரியை ரயில்வே போலீசார் மீட்டு சிகிச்சைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட ராஜேஸ்வரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாம்பலம் ரயில்வே போலீசார், 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால், கொலையாளிகளை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டது. வியாபார போட்டியால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என ரயில்வே தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ராஜேஸ்வரி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 5 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல், ஜான்சன் ஆகியோரை ரயில்வே தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சொந்த தங்கையே கைது செய்யப்பட்டிருப்பதால், குடும்ப உறவில் ஏற்பட்ட பிரச்சனையே கொலைக்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications