ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி பலியான சம்பவம்.. அபாய சங்கிலியில் பிரச்னை இல்லை: ரயில்வே விளக்கம்
சென்னை: ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் தவறி விழுந்து உயிரிழந்த விவகாரத்தில், அபாய சங்கிலி செயல்படவில்லை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், விசாரணைக்குப் பிறகு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
ரயிலில் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தெற்கு ரயில்வே நடத்திய விசாரணையில் அபாய சங்கிலி சரிவர இயங்கியதாக தகவல் தெரிவித்துள்ளனர். கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் உள்ள 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கியதாக அறிவித்துள்ளனர்.

அண்மையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட கொல்லம் விரைவு ரயில், உளுந்தூர்பேட்டைக்கும் விருத்தாசலத்துக்கும் இடையே சென்றுகொண்டிருந்த போது ஏழு மாத கர்ப்பிணி பெண்ணான கஸ்தூரி ரயிலில் இருந்து தவறி விழுந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளனர்.
ஆனால் அபாய சங்கிலி வேலை செய்யாததால், அதனை இழுத்து ரயிலை நிறுத்த முடியவில்லை. இதையடுத்து, பக்கத்து பெட்டியில் உள்ள அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். அதற்குள் ரயில் 8 கி.மீ தூரம் கடந்துள்ளது. பின்னர் 8 கி.மீ தள்ளி நின்ற ரயிலில் இருந்து இறங்கிய உறவினர்கள், கர்ப்பிணி தவறி விழுந்த இடம் நோக்கி ஓடிச் சென்று பார்த்த போது அவர் கிடைக்கவில்லை.
இதையடுத்து ரயில் விருத்தாசலம் சென்றது. பின்னர் கஸ்தூரியின் உறவினர்கள் போலீசாரிடம் கஸ்தூரியை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்தனர். ரயில்வே போலீசார் விரைந்து சென்று கர்ப்பிணியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் உளுந்தூர்பேட்டையில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இறந்த நிலையில் கிடந்த கர்ப்பிணியின் உடலை மீட்டனர்.
உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் கஸ்தூரிக்கு வளைகாப்பு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்துள்ளனர். கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காகவும், வளைகாப்பு நிகழ்வை முன்னிட்டும் சொந்த ஊருக்கு செல்லும் வழியில் இந்த கோர விபத்து நடைபெற்று, கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ரயிலில் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இந்நிலையில் தெற்கு ரயில்வே இதுதொடர்பாக விசாரணையை தொடங்கியது. இந்நிலையில் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என குற்றசாட்டு எழுந்த நிலையில் இன்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
அதில், கொல்லம் ரயிலில் எந்த ஒரு தொழில்நுட்ப கோளாறும் கண்டறியப்படவில்லை. ரயில்வே தொழில்நுட்பக் குழுவினர் நடத்திய விசாரணையில் அபாய சங்கிலி சரிவர இயங்கியதாகவும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் உள்ள 17 பெட்டிகளிலும் அபாய சங்கிலி முழுமையாக இயங்கியதாகவும், அபாய சங்கிலியை முறையான அழுத்தத்துடன் இழுத்திருந்தால் ரயில் நின்றிருக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
அவசர காலங்களில் அபாய சங்கலியை சுமார் 7 கிலோ விசை கொண்டு இழுத்தால் ரயில் நிற்கும். அபாய சங்கிலி தொடர்பு நேரடியாக பிரேக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பதால் ஓட்டுநர் அதனை கட்டுப்படுத்த முடியாது, அபாய சங்கிலியை அழுத்தமாக இழுத்தால் நேரடியாகவே ரயில் நின்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications