சென்னை மழை வெள்ளப் பாதிப்பு! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்?
சென்னை: சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் தத்தளித்த கடந்த 5 மற்றும் 6ஆம் தேதிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முழுவீச்சில் களமாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு இடத்தை மட்டும் பார்த்துவிட்டு சேலத்திற்கு சென்றுவிட்டார்.
ஜெயக்குமார் மட்டுமே அதிமுகவின் முகமாக சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஓரளவு நிலைமையை சமாளித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது வயது மூப்பை கூட பொருட்படுத்தாமல் உடல் நலம் தளர்ந்த நிலையிலும் வேனில் தலைநகரையே சுற்றி வந்தார் கருணாநிதி. அதேபோல் திமுகவினரும் பம்பரமாக சுற்றிச் சுழன்று அரசு நிர்வாகத்திற்கே டஃப் கொடுக்கும் வகையில் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

அதுமட்டுமல்ல டெல்டா மண்டலத்தை சூறையாடிய கஜா புயலின் போதும் எந்த தாமதமும் இல்லாமல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முந்திக்கொண்டு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஸ்பாட்டுக்கு சென்று மக்களை சந்தித்தார். இந்நிலையில் இப்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் தவித்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு பெயருக்கு ஒரு இடத்தை மட்டும் பார்வையிட்டுவிட்டு ஊருக்கு பறந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இதைவிட ஹைலைட் என்னவென்றால் அடுத்தநாள் ஈரோட்டில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி யுவராஜின் தாத்தா நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டது தான். சென்னை மக்கள் உணவு கிடைக்குமா, பால் கிடைக்குமா, தண்ணீர் கிடைக்குமா என எதிர்பார்த்து ஏக்க முற்று காத்திருந்த நிலையில் அதிமுகவின் மொத்த படையையும் களமிறக்கி அரசு நிர்வாகத்திற்கே டஃப் கொடுத்திருக்கலாம். எடப்பாடி பழனிசாமி அழைத்திருந்தால் வெளிமாவட்ட நிர்வாகிகள் லாரி லாரியாக நிவாரணப் பொருட்களை சென்னைக்கு கொண்டு வந்திருப்பார்கள்.

அது அதிமுகவுக்கு வரும் நாட்களில் பெரிய பலமாக அமைந்திருக்கும். ஓ.பன்னீர்செல்வம் கூட 2 நாட்களாக கொளத்தூர் பகுதிக்கு சென்று அவரது ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டின் பெயரில் நிவாரணப் பொருட்களை வழங்கி கவனம் ஈர்த்திருந்தார்.












Click it and Unblock the Notifications