கிளைமேட்டே மாறுதே.. கொளுத்தும் வெயிலிலும் குளு குளு.. அதுவும் இந்த 7 மாவட்டங்களில்.. ஜில் மேட்டர்
தென் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வதைத்த நிலையில், வெயில் மெல்ல தலைகாட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த நவம்பரில் தொடங்கிய குளிர், பிப்ரவரி பாதி வரை நீடித்தது. வழக்கமாக பிப்ரவரி முழுவதும் குளிர் இருப்பது இயல்பானதாகும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி பாதியிலேயே ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தொட்டது. எனவே விரைவில் கோடைக்காலம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தென் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தமிழ்நாட்டில்
அதாவது புதுக்கோட்டை, சிவகங்கை ,தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. நாளை மற்றும் நாளை மறுதினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 4 ஆம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை முதல் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

தேசிய அளவில்
தேசிய அளவில் வெப்ப அலைக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வந்த நிலையில், தற்போது வெயில் தொடங்கியுள்ளது. இந்த வெயில் மே மாதம் 31ம் தேதி வரை கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டும் இதேபோல அதிக வெப்பநிலை விளை பயிர்களை நாசம் செய்தது. அதுபோல இந்த ஆண்டும் பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மின்சாரம்
மேலும், கடந்த ஆண்டு மின்சார பற்றாக்குறையும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. எனவே இந்த ஆண்டு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய நிலக்கரி கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், கோடைக்கால நோய்களை கண்காணிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications