கிடப்பில் போடப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு திட்டம்.! கட்டாயமாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சென்னை: தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போகும் நேரத்தில், கிடப்பில் போடப்பட்டுள்ள மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட சமூக ஆர்லவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வருடந்தோறும் கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டாலும் நிலைமையை சமாளிக்க நிலத்தடி நீர் இதுவரை கைகொடுத்து வந்தது. ஆனால் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக மாநிலம் முழுவதுமுள்ள, சுமார் 26 மாவட்டங்களில் நிலத்தடி நீர் வெகுவாக சரிந்து விட்டது.

தலைநகர் சென்னை உட்பட பல இடங்களில் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. தொடர்ந்து நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தியதாலும், திருட்டுத்தனமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் சமூக விரோதிகளாலும் தான் நிலைமை இவ்வளவு மோசமானதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தலைநகர் சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் நகர்மயமாதல், புற்றீசல் போல பெருகி வரும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட காரணங்களால் நீர் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
சமீப ஆண்டுகளாக குறைந்த காலத்தில் அதிகளவு மழை பெய்கிறது. இதனால் அதில் சுமார் 65 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. மேலும் பெரும்பாலான வீட்டை சுற்றியுள்ள இடங்களை சிமெண்ட் தரையாக மாற்றியுள்ளனர். இதனால் வீடுகளை சுற்றி பெய்யும் மழையால் கிடைக்கும் நீரானது, பூமிக்குள் செல்ல முடிவதில்லை அந்நீர் வழிந்தோடு கால்வாய்களுக்குள் சென்று வெளியேறி விடுகிறது.
அரசு கட்டிடங்களில் ஏற்படுத்தப்பட்ட மழை நீர் சேகரிப்பு அமைப்புகளும், முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் அவை மழை நீரை சேமிக்கும் சக்தியை இழந்து காணப்படுகின்றன.
அதே போல தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இக்குடியிருப்புகளுக்கு அனுமதி தரும் உள்ளாட்சி நிர்வாகங்கள், மழை நீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கோண்டு அவற்றிற்கு அனுமதி வழங்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி அமைத்துள்ள வெள்ளநீர் வடிகால் கட்டமைப்புகளில் மழைநீரை சேகரிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும் தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில், உரிய ஆய்வு நடத்தி மழை நீரை சேகரிக்க உரிய நடவடிக்கைகளை அதிகாரிகன் துரிதப்படுத்த வேண்டும் என சமூக ஆர்லவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே மழை நீரை வீணாகாமல் பாதுகாக்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மிக தீவிரமாக அமல்படுத்துவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இவ்வாறு மழை நீரை தொடர்ந்து நாம் சேமித்து வந்தால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து ஆண்டு முழுவதும் தேவயான நீர் மக்களுக்கு கிடைக்கும் என சமூக ஆர்லவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications