சென்னை, திருவள்ளூர்.. 24 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ளது. அந்த வகையில், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை வெளுத்து வாங்குகிறது.
தலைநகர் சென்னையில் இன்றும் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ச்சியாக தலைநகரம் உள்ளது.
வட கிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் புயல்..2023 ஜனவரி வரை தமிழகத்தை வச்சு செய்யப்போகும் மழை
அடுத்த 3 மணி நேரத்திற்கு
தொடர்ந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், சேலம், கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு இடங்களில் கனமழை
அதேபோல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள்
நாளை மறுநாள் ( ஞாயிற்றுக்கிழமை) பொருத்தவரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மற்றும் 8-ஆம் தேதிகளில்
அதேபோல், 07.11.2022 மற்றும் 08.11.2022 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வருகிற 9-ந்தேதி(புதன்கிழமை) தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், இலங்கையை ஒட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும், அது 10 மற்றும் 11-ந்தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.