6 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. சென்னை வானிலை மையம் ஜில், ஜில் அறிவிப்பு.. பங்குனி வெயில் குறையும்
சென்னை: பங்குனி மாத வெயில் பளிச்சென்று அடித்துக்கொண்டு இருக்கிறது என கடுப்பில் இருந்த மக்களுக்கு ஒரு இனிப்பு செய்தி சொல்லியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பாகவே இவ்வாறு அதிகப்படியான வெயில் விளாசி வருவதால் மக்கள் பெரும் அவதி படுகிறார்கள்.
இந்த நிலையில்தான், சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு ஜில், ஜில், கூல், கூல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வளி மண்டல சுழற்சி
தென் தமிழக கடலோர பகுதிகளில் 1 கி.மீ உயரத்திற்கு நிலவும் வளி மண்டல சுழற்சியால் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும்.
வறண்ட வானிலை
மார்ச் 23, 24 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள்
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். குளுமையான வானிலை நிலவும்.
சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவையொட்டி இருக்குமாம்.