மழைக்காலம்..மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம்..பழைய கட்டிடங்களை இடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை: மழைக்காலத்திற்கு முன்பாக பள்ளிகளில் முற்றிலும் வலுவிழந்த அரசு கட்டிடங்கள், பள்ளி கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களை முன்கூட்டியே கள ஆய்வு செய்து அவற்றை அகற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 01 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை தென்மேற்கு பருவமழை காலம் எனவும், அக்டோபர் 01 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலம் எனவும் கணக்கிடப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் மாற்றம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
வடகிழக்கு பருவமழை
இந்திய வானிலை ஆய்வு மைய அறிவிக்கையின்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இயல்பான மழை அளவை விட 35 முதல் 75 விழுக்காடு கூடுதலாக மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 01.10.2022 முதல் 05.10.2022 முடிய தமிழ்நாட்டில் 5.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், மாநில சராசரி 3.25 மி.மீ. ஆகும்.
பேரிடர்களை எதிர்கொள்ள தயார்
வடகிழக்குப் பருவமழை காலத்தில் ஏற்படும் பேரிடர்களை திறம்பட எதிர்கொள்ள பல்வேறு துறைகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதல்வர் 26.09.2022 அன்று ஆய்வு மேற்கொண்டு, பேரிடர்களின் தாக்கத்தை குறைத்திடவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.
பள்ளிகளில் பாதுகாப்பு
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன் படி, பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். முற்றிலும் வலுவிழந்த அரசு கட்டிடங்கள், பள்ளி கட்டிடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களை முன்கூட்டியே கள ஆய்வு செய்து அவற்றை அகற்ற வேண்டும் என்றும் திறந்த நிலை கிணறுகள், நீர்நிலை தொட்டிகளையும் மூடவும், மின் இணைப்பு சரியாக உள்ளதை உறுதிப்படுத்தவும், தண்ணீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்கவும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள்
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை சேப்பாக்கத்தில் இயங்கி வரும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருவதோடு, பொதுமக்கள் 1070 கட்டணமில்லா தொலைபேசி சேவை மூலம் பொது மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது. மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. 94458 69848 வாட்ஸ் அப் எண் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.