தேசிய கீதம் விவகாரம்! முதல்வர் ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல! ஆளுநர் மாளிகை விமர்சனம்
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய கீதம் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினின் கருத்தானது சிறுபிள்ளைத்தனமானது மற்றும் அபத்தமானது என கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து ராஜ்பவனின் எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திரு.@mkstalin அவர்கள், தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்.

பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள்.
அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக் கொள்ளவோ மாட்டார்கள். இவ்வாறு ராஜ்பவன் கடுமையாக விமர்சித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டசபை தொடங்கியது.

இந்த நிகழ்வானது ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட வேண்டியதான் மரபு! அந்த வகையில் சட்டசபைக்கு வந்த ஆளுநரை சபாநாயகர் அப்பாவு வரவேற்று அழைத்துச் சென்றார். இதைத் தொடர்ந்து அவர் உள்ளே சென்ற போது தேசிய கீதம் இசைக்கப்படாமல் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதாக தெரிகிறது.
இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் தமிழக சட்டசபையை விட்டு வெளியேறினார். பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆளுநருக்கு மரியாதை இருக்கிறது. தமிழக மக்கள், தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரத்தின் மீது ஆளுநருக்கு பற்று உள்ளது, பல்வேறு தருணங்களில் ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடியுள்ளார் என ஆளுநர் மாளிகை விளக்கமளித்திருந்தது.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து முதல்வர் ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அவர் பேசுகையில், முதலில் எல்லோருக்கும் என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தலைவர் கலைஞர் 'பராசக்தி’ படத்தில் ஒரு வசனம் எழுதி இருப்பார், 'இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைப் பார்த்திருக்கிறது’. அதேபோல் இந்தச் சட்டமன்றமும், ஆளுநரைப் பொறுத்தவரை சில ஆண்டுகளாக விசித்திரமான காட்சிகளைத்தான் காண்கிறது. ஆளுநர் வருகிறார், உரையாற்ற வருகிறார். ஆனால், உரையாற்றாமலேயே சென்றுவிடுகிறார். அதனால்தான் ஆளுநரின் செயல்பாடுகளை நான் சிறுபிள்ளைத்தனமானது என்று சொன்னேன்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 176 வரையறுத்துள்ளதின்படி, ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்ற வேண்டும். அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை, அப்படியே வாசிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை மரபு. ஆனால், திட்டமிட்டு விதிமீறல் செய்வதில் தான் ஆளுநர் குறியாக இருக்கிறார்.
2021ம் ஆண்டு இப்போதிருக்கும் ஆளுநர், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு இதே ஆளுநர், தன்னுடைய முதல் உரையை முழுமையாக வாசித்தார். எதையும் மாற்றவில்லை. ஆனால், இந்த மூன்றாண்டு காலமாக என்னென்ன அபத்தமான காரணங்களை எல்லாம் சொல்லி படிப்பதை தவிர்த்தார் என்று இந்த அவையில் இருக்கும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்! பேரவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், அவை நடவடிக்கைகள் முடியும்போது நாட்டுப்பண் ஒலிப்பதும்தான் காலம் காலமாக பின்பற்றப்படும் மரபு. இந்த விளக்கத்தைச் சொன்ன பிறகும் அவர் உரையாற்ற மறுக்கிறார், தவிர்க்கிறார்! தமிழ்நாடு வளர்ந்து வருவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்பது நன்றாக தெரிகிறது. இவ்வாறு முதல்வர் சொன்ன கருத்துக்கு ஆளுநர் மாளிகை ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications