மக்கள் மாளிகை என பெயர் மாற்றினால் போதுமா? சிந்தனையில் மாற்றம் தேவை! ஸ்டாலின் கடும் அட்டாக்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்' பெயர் "மக்கள் பவன்" என மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சிந்தனையிலும், செயலிலும் மாற்றமில்லை எனில் பெயர் மாற்றம் தேவையற்றது என்றும், மக்களாட்சி தத்துவத்தின் கண்களில் மண்ணை தூவுவதற்காக இது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள கவர்னர் மாளிகைகள் 'ராஜ் பவன்' என அழைக்கப்படுகின்றன. யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை 'ராஜ் நிவாஸ்' என அழைக்கப்படுகிறது.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, ராஜ் பவன் என்பதை மக்கள் பவன் என மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாகவே கூறி வந்தார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த கவர்னர்கள் மாநாட்டின் போது இதனை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கோரிக்கையாக வைத்தார்.
இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள ராஜ் பவன்கள் இனி 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ்கள் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாக பெயர் மாற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ராஜ் பவன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவன் தமிழில் மக்கள் பவன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்' பெயர் "மக்கள் பவன்" என மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சிந்தனையிலும், செயலிலும் மாற்றமில்லை எனில் பெயர் மாற்றம் தேவையற்றது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!
சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், "மக்கள் மாளிகை" எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை!
சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே! இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications