விஸ்வரூபம் எடுக்கும் சசிகலா.. "தமிழக அரசியலை மாற்றும் சக்தியே".. நாளுக்கு நாள் பெருகும் ஆதரவு
சென்னை: பெங்களூரில் பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் சசிகலாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகுகிறது. ராஜபாளையத்தில் பெயரே குறிப்பிடாத அதிமுக நிர்வாகி ஒருவர் தமிழக அரசியலை மாற்றும் சக்தியே என பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ஆம் தேதி விடுதலையானார். கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விக்டோரியா மருத்துவமனையிலிருந்து கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு அவர் பண்ணை வீட்டில் தங்கியுள்ளார். நாளை அவர் சென்னைக்கு வருகிறார்.
பார்க்க முடியவில்லையே.. பண்ணை வீட்டின் கேட்டை பக்தியுடன் வணங்கும் சசிகலா ஆதரவாளர்கள்
ராஜமாதா
சசிகலா ஆதரவாக கடந்த 27ஆம் தேதி முதல் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். அவர்களை அதிமுக தலைமை நீக்கியும் வருகிறது. இந்த நிலையில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்கியிருக்கும் வீடுகளுக்கு அருகேவும் ராஜமாதாவே என குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
கார்கள் படையெடுப்பு
இந்த நிலையில் அவரை காண சொகுசு விடுதிகளுக்கு கார்கள் படையெடுக்கின்றன. ஆனால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் அவரை யாரும் காண முடியவில்லை. கடந்த இரு நாட்களுக்கு முன்பு கூட அதிமுக கர்நாடகா மாநில செயலாளர் யுவராஜ், சசிகலாவை காண்பதற்கு சென்றிருந்தார். இதையடுத்து அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
வரவேற்பு
எனினும் தளராத யுவராஜ், சசிகலாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கொடுக்கவுள்ளதாக பேட்டி அளித்துள்ளார். இந்த நிலையில் நாளை சசிகலா வரும் நாளையொட்டி பேனர்கள், போஸ்டர்கள், கட்சிக் கொடிகள், வரவேற்பு பதாகைகள் என களை கட்டி வருகிறது. இந்த நிலையில் பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் சசிகலாவுக்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
சென்னை வருகை
ராஜபாளையத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் தமிழக அரசியலை மாற்றும் சக்தியே என பேனர் வைத்துள்ளதால் பரபரப்பு எழுந்தது. அதிலும் அந்த பேனரை வைத்தவர் யார் என தெரியவில்லை. இது போல் சசிகலாவுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஆதரவு பெருகி வருவதால் அவரது சென்னை வருகையின் போது அவர் நிச்சயம் விஸ்வரூபம் எடுப்பார் என்றே தெரிகிறது.