அதிமுக பொதுக்குழு! திடீரென உச்ச நீதிமன்றத்தை நாடிய ராஜேந்திர பாலாஜி! ஓ அதுக்கு இதுதான் காரணமா?
சென்னை : அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை செல்வதற்கு தனக்கு அனுமதி வழங்க கோரி முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி 3 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவானார்.
தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனிப்படை போலீசார் நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜி அதிமுக
கர்நாடகாவின் ஹாசன் பகுதியில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை கீழமை நீதிமன்றங்கள் நிராகரித்த நிலையில், இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

நீதிமன்றம் நிபந்தனை
அதே நேரத்தில் வழக்கு விசாரணை நடைபெறும் காவல் எல்லைக்கு வெளியே செல்லக்கூடாது, ராஜேந்திரபாலாஜி தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் ஜூன் 22ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ள அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் மனு
அதில் விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் உள்ள தனக்கு ஜூன் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாகவும் இதில் கலந்து கொள்வதற்காக குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு தனக்கு அனுமதி வழங்க வேண்டுமென ராஜேந்திர பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார்.

கூட்டத்தில் பங்கேற்பாரா?
மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் ராஜேந்திரபாலாஜி தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்வழக்கு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தால் மட்டுமே அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications