இப்போது முதல்வரை பார்க்க முடியாது... ராஜேஷ்வரிபிரியாவை திருப்பி அனுப்பிய போலீஸ்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஷ்வரிபிரியா முதல்வரிடம் மனு கொடுக்க சென்ற நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மட்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஷ்வரி பிரியா மதுக்கடைகளை மூட வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளிக்க தலைமைச் செயலகம் சென்றிருக்கிறார்.

கொரோனா பரவும் சூழலில் தற்காலிகமாக மனுக்கள் பெறுவதில்லை என்றும், முதல்வரையும் கொரோனா பதற்றம் முடியும் வரை பார்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தலைமைச் செயலக வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்ட அவர் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். அங்கும் இதே பதிலை காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஆனாலும் மதுவுக்கு எதிரான தனது மனுவை முதல்வரிடம் வழங்காமல் செல்ல மாட்டேன் என கூறியிருக்கிறார் ராஜேஷ்வரி பிரியா. பிறகு காவல்துறை உயர் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் மனுவை தாங்களே முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் கூறி அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அதையேற்று தனது மனுவை அவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றிருக்கிறது ராஜேஷ்வரிபிரியாவுடன் சென்ற குழு.












Click it and Unblock the Notifications