பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்... தயவு தாட்சணையின்றி தண்டனை தருக -ராஜேஸ்வரிபிரியா
சென்னை: தமிழகத்தில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்கள் தயவு தாட்சண்யமின்றி மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியதுடன் செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார். அப்போது கூறிய அவர், தமிழகத்தில் தொடர்ச்சியாக பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், அதுவும் கொரோனா காலத்தில் குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 4% மட்டுமே பாலியல் குற்றங்களில் தொடர்புடையவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும், காவல்துறை விசாரணையிலும் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது போன்ற விவகாரங்களுக்காக மத்திய அரசால் நிறுவப்பட்ட வர்மா கமிட்டியின் பரிந்துரைகள் தமிழகத்தில் நடைமுறையில் இல்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டோருக்கு சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இரண்டு மாதங்களுக்குள் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தம்மாத்துண்டு கரப்பான்பூச்சிக்கே ஊரை கூட்ரோமே.. இந்தா பாருங்க!.. ராட்சத கரப்பான்பூச்சி கண்டுபிடிப்பு
இதேபோல் சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து இழிவாக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் பெண்கள் உறுப்பு குறித்து பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என ராஜேஸ்வரிபிரியா சாடியுள்ளார்.