இதை முதலிலேயே செய்திருக்கலாம்.. ரஜினிகாந்துக்கு அபராதம் இல்லை.. ரசீது வழங்கிய சென்னை மாநகராட்சி
சென்னை: இன்றைக்குள் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருந்த நிலையில். ரஜினிகாந்த் சொத்துவரியான 6.56 லட்சம் ரூபாயை செலுத்திவிட்டார். இதற்காக அவருக்கு சென்னை மாநகராட்சி ரசீது வழங்கி உள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்தாத வழக்கில் வரி விதிக்க தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில் கடந்த ஏப்ரல் முதல் கொரோனா தடுப்பு ஊரடங்கால் ராகவேந்திரா திருமண மண்டபம் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு என்பதால் மண்டபத்தை புக்கிங் செய்தவர்களுக்கு முன்தொகை திரும்ப செலுத்த தமிழக அரசு அறிவுறுத்தியதால் பணம் திரும்ப அளிக்கப்பட்டது.
ஏன் இந்த அவசரம்.. கோர்ட் நேரத்தை வீணடிப்பதா.. ரஜினிக்கு நீதிபதி கடும் கண்டனம்!
பாதி வரி வசூலிக்க
ஆனால் செப்டம்பர் 10ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தாவிட்டால் 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்துவரியில் பாதி வரியை வசூலிக்க கோரி சென்னை மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எனவே சொத்து வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
நீதிபதி கேள்வி
இதை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், செப்டம்பர் 23 தேதி கடிதம் அனுப்பிவிட்டு 29ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடர முடியும். நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அவகாசம் வேண்டாமா? சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நினைவூட்டல் கடிதம் தர வேண்டுமே என்று கருத்து தெரிவித்தார். இதையடுத்து நினைவூட்டல் கடிதம் கொடுத்து விடுகிறோம் என்று கூறிய ரஜினி தரப்பு மனுவை வாபஸ் பெற அனுமதிக்க கோரியது. இதைகேட்ட நீதிபதி மனு வாபஸ் தொடர்பான மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். இதன்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து உத்தரவிட்டார்.
சொத்து வரி அபராதம்
இந்த சூழலில் சென்னை மாநகராட்சி இன்றைக்குள் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை அரையாண்டு துவங்கிய முதல் 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். இந்நிலையில் கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் படி, உரிய காலத்தில் சொத்து வரியை செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத் தொகை வழங்கப்படும், உரிய காலத்தில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு 2 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது.
15 நாட்கள் கெடு
‘இதன்படி கடந்த 10ம் தேதி வரை சொத்துவரி செலுத்திய 5,18,286 உரிமையாளர்களுக்கு செலுத்தப்பட்ட சொத்து வரியில் ரூ.4.56 கோடி ஊக்கத்தொகையாக நேர் செய்யப்பட்டது, இதை தவிர்த்து சட்டத்திருத்தத்தின் படி, அரையாண்டு துவங்கிய முதல் 15 தினங்களுக்குள் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி செலுத்தப்படாமல் இருந்தால் செலுத்தப்பட வேண்டிய சொத்துவரியுடன் கூடுதலாக ஆண்டிற்கு இரண்டு சதவீதிற்கு மிகாமல் தனிவட்டி விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சொத்து வரி செலுத்தினார்
எனவே சொத்து உரிமையாளர்கள் , நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியை இன்றைக்குள் (15ம் தேதி) செலுத்தி தங்களது சொத்து வரியின் மீது விதிக்கப்படும் தனிவட்டியை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநகராட்சியின் அறிவிப்பின் படி, ரஜினி உள்பட யாராக இருந்தாலும் இன்றைக்குள் வரி செலுத்தினால் அபராதத்தில் இருந்து தப்ப முடியும் என்ற நிலை இருந்தது. இறுதியில் ரஜினிகாந்த் சொத்துவரியான 6.56 லட்சம் ரூபாயை செலுத்திவிட்டார். இதற்காக அவருக்கு சென்னை மாநகராட்சி ரசீது வழங்கி உள்ளது