பாச்சா பலிக்காது-பலிகடாவாவது நிச்சயம்-பதம் பார்க்கப் போகும் "திராவிட" புலிகள்..தப்புமா "பாயும் புலி"
சென்னை: 2021 சட்டசபை தேர்தலில் வென்றாக வேண்டும் என வெறித்தனமாக இருக்கும் அதிமுகவும் திமுகவும் ரஜினிகாந்தின் உதார் விடுதல்களை ஊதித்தள்ளாமல் ஓய்ந்துவிடாது.
Recommended Video
தமிழகத்தில் அதிமுக அல்லது திமுகதான் ஆட்சி அமைக்க முடியும் என்பதுதான் அரை நூற்றாண்டு கால வரலாறு. இந்த இரு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு சதவீதத்தில் ஏற்றம் இறக்கம் இருக்கின்றன.
ஆனால் இரு கட்சிகளுமே அடிப்படை கட்டமைப்புகளை வீடுதோறும் - ஒவ்வொரு வீடுதோறும் (ரஜினிகாந்த் அவர்களே பூத்தோறும் அல்ல) கொண்டிருக்கக் கூடியவை. ரஜினிகாந்தின் வாக்குமூலப்படியே இரு கட்சிகளுக்குமே வாழ்வா சாவாதான் வரும் 2021 சட்டசபை தேர்தல்.

வேட்கையுடன் கட்சியினர்
கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தங்களது அரசியல் எதிர்காலம் என்னவென்பதை தீர்மானிக்கப் போகும் தேர்தல்தான் 2021. இந்த இரு கட்சியினருமே சட்டசபை தேர்தல் களம் எப்போது என பெரும் வேட்கையுடன் காத்திருக்கின்றனர். இந்த அடிப்படை அரசியலைப் பற்றி புரிந்திருந்தும் மண்டபத்தில் யாரோ சொன்னதை நம்பி மன்னன் ரஜினிகாந்த் மைதானத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார்.

ஆட்சி- கட்சி- அண்ணா வழி
ஆட்சிக்கு ஒரு தலைமை- கட்சிக்கு ஒரு தலைமை என்பதையும் இந்த தமிழகம் கண்டிருக்கிறது. தம்பி வா! தலைமை ஏற்க வா என்று அழைத்தவரே ரஜினிகாந்த் வீழ்த்த நினைக்கும் திராவிடக் கட்சிகளின் முகவரி பேரறிஞர் அண்ணாதான். கொண்டதும் ஏற்றதும் ஒரே தலைவர்... அவருக்காக நாற்காலி காத்திருக்கும் என தனிக்குடித்தனம் போன போது கூட தந்தை பெரியாருக்காக தலைவர் பதவியை காலியாகவே வைத்திருந்த தகைசால் பெருந்தகை பேரறிஞர் அண்ணா.

திராவிட கட்சி தொண்டர்கள்
அண்ணா உருவாக்கிய தம்பிகள் பலர் மறைந்திருக்கலாம். அவர்தம்பி கருணாநிதி உருவாக்கிய தம்பிகள் இன்னமும் களத்தில் இருக்கின்றனர். கருணாநிதியின் ஒற்றை சொல்லுக்காக உயிரை கொடுக்கும் லட்சோப லட்சமான உடன்பிறப்புகள் இன்னமும் உலாவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அண்ணாவின் தம்பி எம்ஜிஆர் மறைந்திருக்கலாம். எம்ஜிஆரின் தளபதிகள் மரணித்திருக்கலாம். எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்துக்காக தம்மையே தாரைவார்த்துக் கொடுத்த ரத்தத்தின் ரத்தங்கள் லட்சக்கணக்கிலேயே இன்னமும் அவரை தெய்வமாகவே வணங்கி வருகின்றனர்.

பலிகடாவாகும் ரஜினி
இந்த உடன்பிறப்புகளையும் ரத்தத்தின் ரத்தங்களையும் மீறி தம்மால் அரசியலில் வென்றுவிட முடியும் என்கிற மகத்தான மமதையுடன் களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கிறார் ரஜினிகாந்த். இன்னமும் சொல்லப் போனால் தூங்கிக் கிடந்த திராவிட கட்சிகளின் புலிகளை ரஜினிகாந்த் உசுப்பேற்றிவிட்டுவிட்டார். 2021 தேர்தல் களத்தில் திராவிடப் புலிகளிடம் சிக்கி பலிகடாவாக போவது ரஜினிகாந்த் என்பதுதான் நிதர்சனம்.












Click it and Unblock the Notifications