டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துட வேண்டியதுதான்.. ரஜினிகாந்த்
சென்னை: கொரோனா நெருக்கடி நேரத்தில் டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள் என மிகவும் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ரஜினியின் கருத்து அதிரடியாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் நிதி நெருக்கடியை சமாளிக்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன என பலர் கூறிய நிலையில் தற்போது ரஜினிகாந்தும் அதே கருத்தை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

45 நாட்கள்
கொரோனா பாதிப்பால் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவை கடந்த 45 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் நிதி நெருக்கடியை சமாளிக்க ஒரு சில தளர்வுகளை சில கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு விதித்துள்ளது.

சமூக ஆர்வலர்கள்
டாஸ்மாக் கடைகளுக்கும் அந்த தளர்வுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாமர மக்கள்
அத்துடன் டாஸ்மாக் கடைகளுக்கு சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது என்றால் அது போல் பள்ளிகள், கோயில்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றையும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என பாமர மக்களும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தீர்ப்பு
இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கூடாது என திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications