பல்லுபோன நடிகர்.. பங்கம் செய்த துரைமுருகன்.. "விடுங்க என் நண்பர்தான்.." ரஜினிகாந்த் கூல் பதில்
சென்னை: சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக சீனியர்கள் குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையாகியது. இந்த நிலையில், சினிமாவில் பல்லுப் போன நடிகர் என ரஜினிகாந்தை விமர்சித்திருந்தார் துரைமுருகன். இதற்கிடையே துரைமுருகன் என் நண்பர், எங்கள் நட்பு தொடரும் என பதிலளித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாய் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் மேடைப்பேச்சுகளில் ரஜினிகாந்தின் தைரியமான பேச்சு பலரையும் கவர்ந்தது. அப்படி நேற்று முன் தினம் அவர் பேசிய பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நேற்று முன்தினம் சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞரின் தாய் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த புத்தகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட நிலையில் முதல் புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வெகுவாக பாராட்டி பேசினார். “திமுக தலைவர் கருணாநிதி மறைந்த பின் அந்த கட்சியை கட்டி காப்பாற்றுவது எவ்வளவு சிரமம் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அதனை மிக சாதாரணமாக சமாளிக்கிறார். ஒரு பள்ளியில் புதிய மாணவர்களை ஆசிரியர் சமாளித்து விடுவார். ஆனால் ஓல்ட் ஸ்டுடென்ட்ஸை சமாளிப்பது மிகவும் கஷ்டம் இங்கு நிறைய ஓல்ட் ஸ்டுடென்ட்ஸ் இருக்கின்றனர். அதுவும் துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார்.
அவர் கலைஞர் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்ட கூடியவர்.. ஒரு விஷயத்தை எப்படி இருக்கிறது என கேட்டால் சந்தோஷம் என ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்.நன்றாக இருக்கிறது என்கிறாரா அல்லது நன்றாக இல்லை என்று சொல்கிறாரா என யாருக்கும் தெரியாது. இந்த சூழலில் சிறப்பாக பணியாற்றி வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆப்” என்றார். ரஜினிகாந்தின் பேச்சைக் கேட்டு அரங்கில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எவ வேலு, உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா உள்ளிட்ட பலரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.
ரஜினிகாந்தின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சிரித்துக் கொண்டே திமுக சீனியர்களை ரஜினிகாந்த் சீண்டி விட்டார் என பலரும் பேசி வந்தனர். இந்த நிலையில் வேலூரில் அமைச்ச துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுகவில் மூத்த அமைச்சர்களால் ஸ்டாலின் சிரமப்படுகிறார் என ரஜினிகாந்த் பேசியிருக்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்,”அரசியலில் இருப்பதைப் போல சினிமாவிலும் பல்லு போன வயதில் மூத்த நடிகர்கள் இருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது” என கூறினார். இதன் மூலம் ரஜினிகாந்தை வெளிப்படையாகவே விமர்சித்ததாக கருத்துக்கள் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பேசியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் சினிமாவில் பல்லு போன நடிகர்கள் இருக்கிறார்கள் என்ற துரைமுருகனின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த்,”மதிப்பிற்குரிய துரைமுருகன் எனது நீண்ட கால நண்பர்.. அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர் என்ன சொன்னாலும் வருத்தம் கிடையாது.. எங்கள் நட்பு எப்பவுமே தொடரும்” என்றார்.












Click it and Unblock the Notifications