அவதூறு பரப்பிய பிஆர் ஏஜென்சி? நான் அவ்வளவு தரம் தாழ்ந்தவன் அல்ல! கலங்கிய ரஜினி.. காரணம் என்ன?
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பான சூழலைச் சந்தித்து வரும் வேளையில், தன் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட கடுமையான சமூக வலைத்தள அவதூறுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தனக்கு எதிராக பரப்பப்பட்ட கடுமையான எதிர்மறைத் தாக்குதல்கள் மற்றும் வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அவருக்கு எதிராக சில குறிப்பிட்ட பிஆர் ஏஜென்சிகள் (PR Agencies) திட்டமிட்டு அவதூறு பரப்புவதாக.. அவருக்கு சென்ற தகவலின் அடிப்படையில் இந்த செய்தியாளர் சந்திப்பை அவர் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து இருந்த ரஜினிகாந்த் வேறு வழியின்றி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

திட்டமிட்ட பிஆர் தாக்குதலும் ரஜினியின் விளக்கமும்
தேர்தலில் ஏற்பட்ட தொங்கு சட்டமன்றக் கணக்குகளைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் தவெகவிற்கு எதிராக லாபி செய்ததாகவும், புதிய முதல்வர் விஜய்யின் வெற்றியை அவர் விரும்பவில்லை என்றும் சில பிஆர் நிறுவனங்கள் சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு எதிர்மறைப் பிரசாரங்களை மேற்கொண்டன. முக்கியமாக அதிமுக - திமுக இடையே கூட்டணி அமைக்க ரஜினிகாந்த் தூது போனார் என்றும் செய்திகள் வந்தன.
இந்த அவதூறுகள் குறித்துப் பேசிய ரஜினிகாந்த், "தேர்தல் தொடர்பாக என் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. நான் இதற்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தால், அதுவே உண்மை என்று மக்கள் நம்பிவிடுவார்கள். அதனால்தான் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறேன்" என்று தன் தரப்பு நியாயத்தை வெளிப்படையாக உடைத்தார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கு இடையே ரஜினிகாந்த் குதிரை பேரம் பேச முயன்றதாக எழுந்த வதந்திகளை அவர் முற்றிலுமாக மறுத்தார். "தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நான் மு.க.ஸ்டாலின் சாரை நேரில் சந்தித்துப் பேசினேன். அவர் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததால், ஒரு நண்பனாக அவருக்கு ஆறுதல் கூறவே சென்றேன். அவருக்கும் எனக்குமான நட்பு கடந்த 35-40 ஆண்டுகால பழமை வாய்ந்தது. நமது நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது" என்று உணர்ச்சிப்பூர்வமாகக் குறிப்பிட்டார்.
மேலும், "ஆனால், இந்த சந்திப்பை வைத்துக்கொண்டு, நான் இரு பெரும் கட்சிகளுக்கு இடையே டீல் பேச முயன்றதாக அசிங்கமான விமர்சனங்களைச் பரப்பியுள்ளனர். நான் அந்தளவுக்குத் தரம் தாழ்ந்துப் போகும் நபர் அல்ல என்பதை மிகத் தெளிவாகப் பதிவு செய்ய விரும்புகிறேன்," என்று காட்டமாகக் கூறினார்.
விஜய் மீது பொறாமையா? ரஜினி கொடுத்த நெத்தியடி
நடிகராக இருந்து தற்போது தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்யின் அசாத்திய வெற்றியைக் கண்டு ரஜினிகாந்த் பொறாமைப்படுவதாகப் பரப்பப்பட்ட வதந்திகளுக்கும் அவர் சிரித்துக்கொண்டே பதிலடி கொடுத்தார்.
"விஜய்க்கும் எனக்கும் இடையே கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலான தலைமுறை இடைவெளி உள்ளது. நான் அரசியலிலேயே இல்லாத போது, நான் ஏன் அவர் மீது பொறாமைப்பட வேண்டும்? விஜய்யின் இந்த சாதனை என்பது சாதாரணமானது அல்ல. அன்றைய காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் (MGR) மற்றும் என்.டி.ஆர் (NTR) செய்த சாதனைகளை விட இது மிகப்பெரியது. மத்தியில் ஆளும் ஒரு சக்திவாய்ந்த மத்திய அரசு மற்றும் தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து நின்று அவர் இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்" என்று விஜய்யை மனதாரப் பாராட்டினார்.
விஜய்யின் வெற்றி தனக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்குத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும், அவர் தனது புதிய அரசியல் பொறுப்பில் தன்னை நிரூபித்துக் காட்ட மக்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
விஜய் வெற்றி பெற்றவுடன் எக்ஸ் (X) தளத்திலேயே தான் வாழ்த்து தெரிவித்துவிட்டதாகவும், விமான நிலையத்தில் வாழ்த்து சொல்லவில்லை என்று கூறுவதெல்லாம் வீண் வதந்திகள் என்றும் அவர் விளக்கமளித்தார்.
60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு மாற்றம் தேவைப்பட்டதாகவும், அந்த மாற்றத்தைக் கொண்டுவர விஜய் சரியான இடத்தில் இருக்கிறார் என்றும் ரஜினிகாந்த் இந்த செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படையாகக் கூறினார். இதன் மூலம், கடந்த சில நாட்களாகத் திட்டமிட்டுத் தன் மீது தொடுக்கப்பட்ட நெகட்டிவ் பிஆர் தாக்குதல்கள் அனைத்தையும் ரஜினிகாந்த் தனது ஒற்றைச் செய்தியாளர் சந்திப்பின் மூலம் தவிடுபொடியாக்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications