இவ்வளவுதான் அரசியல் ஞானமா.. ஒரே மாதத்தில் ரஜினிகாந்த் அடித்த அந்தர் பல்டி!
Recommended Video
சென்னை: பாஜக செல்வாக்கை இழந்துள்ளதாக கூறியுள்ளதன் மூலம், ரஜினிகாந்த் தனது முந்தைய கருத்தில் இருந்து பலே பல்டி அடித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம், ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தபோது, நிருபர்கள் அவரிடம், 7 தமிழர்கள் விடுதலை குறித்து கேள்வி எழுப்பினர். தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை, குடியரசுத் தலைவர் கவனத்திற்கே கொண்டுப் போகாமல், மத்திய உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்துவிட்டதாமே என்று நிருபர்கள் கேட்டபோது, 'எந்த எழு பேரு?' 'எனக்கு அது தெரியலைங்க... இப்போ தான் வந்திருக்கேன்'என்று பதிலளித்தார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த்தின் இந்த பேட்டி கடும் கண்டனங்களுக்கும், கேலி கிண்டலுக்கும் உள்ளானது.
கிண்டல்
மேலும் விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தபோது, பாஜக ஆபத்தான கட்சியா என்று கேள்வி எழுப்பப்பட்டது. எதிர்க்கட்சிகள் அப்படின்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அப்போ அது ஆபத்தான கட்சிதானே என்று கிண்டலாக எதிர்க்கட்சிகளை நோக்கி கேள்வி எழுப்பினார் ரஜினிகாந்த்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி
இதையடுத்து, அடுத்த நாள் தனது வீட்டில் நிருபர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது 7 தமிழர் விடுதலை குறித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த், அவர்கள் விடுதலைக்கு தனது ஆதரவு உண்டு என்றார். பிறகு, பாஜகவுக்கு எதிராக திரளும் மெகா கூட்டணி குறித்து என்ன நினைக்கிறீர்கள்? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
யார் பலசாலி
அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், 10 பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்து போராடுறாங்கனா யார் பலசாலி? என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார். அப்படியானால் மோடி பலசாலி என்று சொல்கிறீர்களா? என்று அவரிடம் மீண்டும் கேட்கப்பட்ட போது, இதைவிட க்ளீயரா யாரும் பதில் சொல்ல முடியாது என்றார்.
மெகா கூட்டணி
மோடியை பலசாலி என்றும், திமுக, காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைக்க திட்டமிட்டுள்ள மெகா கூட்டணியை பலமிழந்துவிட்டது என்றும் ரஜினிகாந்த் பட்டவர்த்தனமாக தெரிவித்து இன்றுடன் ஒரு மாதம் கூட ஆகவில்லை. ஆனால், இன்று ரஜினிகாந்த் அப்படியே பல்டியடித்துள்ளார்.
அரசியல் ஞானம்
5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, சென்னை விமான நிலையத்தில், ரஜினிகாந்த்திடம் நிருபர்கள் கேட்டபோது, பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு என்றார். இதன் மூலம், மோடியின் பாஜகவை பலம் வாய்ந்தது என்ற ரஜினிகாந்த் ஒரே மாதத்திற்குள், அது செல்வாக்கை இழந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். இதன் மூலம், ரஜினிகாந்த்தின் அரசியல் கணிப்பு ஆதாரமற்றது, தரவுகள் இல்லாதது என்பது உறுதியாகியுள்ளது. பாஜகவின் உண்மை பலத்தை அறியாமல், எதிர்க்கட்சிகளை கேலி பேசிய ரஜினிகாந்த் இப்போது தனது வாயாலேயே, பாஜக செல்வாக்கை இழந்துள்ளதாக கூறியுள்ளார். ரஜினிகாந்த்தின் அரசியல் அறியாமையை இந்த பல்டி பேட்டிகள் அம்பலப்படுத்தியுள்ளன.