Rajinikanth: அன்று காக்கா- கழுகு கதையால் விஜய்யை விமர்சித்த ரஜினி! நடந்தது என்ன? வைரலாகும் பழைய கதை!
சென்னை: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினி கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் சொன்ன காக்கா, கழுகு கதை தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கூறியதாவது: "காட்டில் எல்லா பறவைகளும் இருக்கும். காகம், கழுகு என எல்லாமே இருக்கும். காகம் எப்போதும் மற்ற பறவைகளைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கும்.

குறிப்பாக, கழுகு அமைதியாகப் பறந்து கொண்டிருக்கும் போது, காகம் அதன் பின்னால் சென்று அதைக் கொத்திக்கொண்டே இருக்கும். ஆனால் கழுகு அதற்குப் பதில் கொடுக்காது, கோபப்படாது. மாறாக, கழுகு தனது சிறகுகளை விரித்து இன்னும் உயரமாகப் பறக்கத் தொடங்கும்.
கழுகு உயர உயரப் பறக்கப் பறக்க, அந்த உயரத்திலுள்ள ஆக்சிஜன் குறைவால் காகத்தால் அங்கே நீடிக்க முடியாது. தானாகவே மூச்சுத் திணறி காகம் கீழே விழுந்துவிடும். எனவே, உங்களை யாராவது விமர்சித்தால் அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்காமல், உங்கள் வேலையில் கவனம் செலுத்தி உயரப் பறந்து கொண்டே இருங்கள். இவ்வாறு அறிவுரை வழங்கினார்.
ஏன் இது சர்ச்சையானது?
ரஜினிகாந்த் இந்தக் கதையை சொன்னவுடன், சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே மோதல் வெடித்தது.
இதையடுத்து "சூப்பர் ஸ்டார் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது, மற்றவர்கள் காகம் போலத்தான்" என்று ரஜினி குறிப்பிட்டதாகப் பதிவிட்டனர்.
இதற்கு பதிலடியாக "விஜய் வளர்ந்து வருவதைப் பிடிக்காமல் ரஜினி இப்படிப் பேசுகிறார்" என்று பதிலடி கொடுத்தனர்.
விஜய்யின் ரியாக்ஷன்
சில மாதங்களுக்குப் பிறகு நடந்த லியோ வெற்றி விழாவில் விஜய் பேசும்போது, "காட்டில் ஒருத்தன் வேட்டைக்கு போனான்... அங்கே காக்கா, கழுகு எல்லாம் இருக்கும்" என்று ஆரம்பித்தார். அவர் 'கழுகு' என்று சொன்னபோதே அரங்கமே அதிர்ந்தது. இது ரஜினிக்கு விஜய் கொடுத்த 'கவுண்டர்' என்று பார்க்கப்பட்டது.
ரஜினி பதிலடி
இந்த விவகாரம் முற்றிய நிலையில், லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி இதற்கு நேரடியாக விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில் "நான் சொன்ன கதை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. நான் விஜய்யைச் சொன்னதாகப் பரவிய செய்தி எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது."
விஜய் என் கண் முன்னால் வளர்ந்த பையன். அவர் இன்று இந்த உயரத்திற்கு வர அவர் பட்ட உழைப்பு எனக்குத் தெரியும். நானும் விஜய்யும் எப்போதும் நல்ல நண்பர்கள்தான். தயவுசெய்து ரசிகர்கள் எங்களை ஒப்பிட்டுப் பேசாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து ரஜினி- விஜய் ரசிகர்களிடையேயான கருத்து மோதல்கள் அவ்வப்போது வரும். இந்த நிலையில் திமுகவின் மிரட்டலால்தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு ரஜினி இன்று மறுப்பு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications