தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது மட்டும் கட்சி தொடங்கிட்டீங்களா என்ன?.. ரஜினிக்கு மக்கள் கேள்வி
Recommended Video
சென்னை: கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு ஏன் செல்லவில்லை என்ற நிருபர்கள் கேள்விக்கு ரஜினி கூறுகையில் நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. பிறகு பார்க்கலாம் என கூறியுள்ளது மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்த் எப்போதும் அரசியலுக்கு வரபோகிறேன் என கூறினாரோ அன்று முதல் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் சர்ச்சைக்குரியதாகவே மாறிவிட்டது.
ஒவ்வொரு முறையும் அவர் இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவிடுவதால் மக்கள் மனதில் இருந்து மெல்ல ஒதுக்கி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கென சொந்தமாக டிவி சேனல் ஆரம்பிக்கும் வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
செய்தியாளர்கள்
பேட்ட படம் முடித்த கையோடு குடும்பத்துடன் அமெரிக்காவில் புத்தாண்டை கழிப்பதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் நிருபர் ஒருவர் கமல்ஹாசன் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். ஆனால் நீங்கள் இன்னும் பார்வையிடாதது குறித்து ... என்று கேட்டார். அதற்கு ரஜினி கூறுகையில் நான் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை.
நன்றாக இருக்கும்
அதெல்லாம் பிறகு பார்க்கலாம் என்று ரஜினி கூறிய பதில் மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ரஜினியை தமிழக மக்கள் சற்று உயர்த்தியே பார்த்து வருகின்றனர். ரஜினியின் சிம்ப்ளிசிட்டி, உதவும் எண்ணம் ஆகியவற்றை பார்த்த ஒரு சிலர் அவர் தலைமையில் ஆட்சி அமைந்தால் நன்றாக இருக்கும் என நிலைக்கு வந்தனர்.
ஆறுதல்
ஆனால் இப்போது இவர் பேசி வருவதை பார்க்கும் போது மக்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது கூட தான் ரஜினி கட்சியை ஆரம்பிக்கவில்லை. ஆனால் அவர் பாதிக்கப்பட்டவர்களை போய் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ரஜினிக்கு தார்மீக உரிமை
அப்படியிருக்கையில் கஜா புயலுக்கு மட்டும் கட்சி ஆரம்பித்தால்தான் செல்ல வேண்டும் என இவராகவே ஒரு வட்டத்தை போட்டு கொள்வது எந்த வகையில் நியாயம். மக்களின் துயரோடு துணை நின்று அதன் பின்னர் கட்சி தொடங்கி தேர்தல் நேரத்தில் மக்களை சந்தித்து வாக்கு கேட்க ரஜினிக்கு தார்மீக உரிமை உண்டு.
மனதில் எழும் கேள்வி
அதை விட்டுவிட்டு கட்சி தொடங்கினால் தான் செல்வேன் என கூறுவது, மக்கள் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க மாட்டார். இடர்பாடுகளில் உள்ளவர்களை போய் சந்திக்க மாட்டார். ஆனால் இவர் வந்து கேட்டால் ஓட்டு மட்டும் போட்டு விட வேண்டுமா என்ற நியாயமான கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
நியாயம்
இதுவரை எத்தனை இடர்கள், தானே புயல், வர்தா புயல், 2015 வெள்ளம், சுனாமி உள்ளிட்ட எத்தனை பிரச்சினைகள் வந்த போதும் ரஜினி என்ற ஒருவரை பற்றி யாரும் பேசவில்லை. எனவே அரசியலுக்கு வரும் முனைப்பில் உள்ள ரஜினி இதுபோல் பொறுப்பறற பதில்களை கூறுவது எந்த வகையில் நியாயம்.
ரஜினி எப்போது உணர்வார்
நண்பரோ, முக்கியஸ்தரோ உயிரிழந்துவிட்டால் உடனடியாக அவர்களது உடலுக்கு நாம் குடும்ப உறுப்பினர்கள் இல்லாதபட்சத்திலும் இரவோடு இரவாக போய் அஞ்சலி செலுத்துவது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இதுபோல் இடர்களில் தோள் கொடுப்பது என்பதை ரஜினி எப்போதுதான் உணர்வார்?
புரிய வைப்பது யார்
ரஜினியின் செயல்பாடுகள், தனது தேவைக்கு மட்டுமே மக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் இருந்தால் அது பல்வேறு விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகுமே ஒழிய, அவர் தொடங்கும் அரசியல் கட்சிக்கும் எதிர்காலத்துக்கும் பொருத்தமானதாக இருக்குமா என்பதை அவருடன் இருப்பவர்கள் ரஜினிக்கு புரிய வைப்பது எப்போது?