விஜயகாந்துக்கு ஒரு டவல் போதும் ஆல் கிளியர்.. நான் சுயநினைவு இல்லாமல் இருந்தபோது.. நாதழுதழுத்த ரஜினி
சென்னை: விஜயகாந்த் தனக்கு செய்த இரு பேருதவிகளை பட்டியலிட்ட ரஜினிகாந்த் நா தழுதழுக்க பேசிய காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்துடன் பழகினாலே அவருடைய நல்ல மனதால் அனைவரும் அவருடைய அன்புக்கு கட்டுப்படுவார்கள். அவருக்கென நிறைய நண்பர்கள் உள்ளனர். ஆனால் அவருக்கு எதிரியே யாரும் இருக்க மாட்டார்கள். தன்னை விமர்சனம் செய்தாலும் அவர்களை பதிலுக்கு விமர்சிக்கவே விடமாட்டார்.

இத்தனை நல்ல உள்ளம் படைத்த விஜயகாந்த் நிஜமாகவே சொக்கத்தங்கம்தான். அவர் வாழும் போது எத்தனை பேர் அவருடன் பழகினார்களோ, ஆனால் அவர் இறந்த போது தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது.
ஆரம்ப காலங்களில் அதாவது ரஜினி, கமல் எல்லாம் உச்ச நட்சத்திரமாக இருந்த போது விஜயகாந்த் சினிமாவுக்கு வந்ததும் அவரை பலர் ஏளனப்படுத்தினார்களாம். ஏற்கெனவே ஒரு கருப்பு இருக்கிறது, இதில் நீ வேற நடிக்க வந்துட்டியா என கேட்பார்களாம். கருப்பாக இருந்தாலும் அவர் அழகு என சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு தெரியவில்லை போலும்!
ஆனாலும் விஜயகாந்த் தனது தனித்துவமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். விஜயகாந்தின் நற்குணங்களால் அவருக்கு ரஜினி, கமல், சத்யராஜ், தியாகு, ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நண்பர்களாகினர். அந்த வகையில் விஜயகாந்தின் இறப்பால் அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் தூத்துக்குடியில் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு இன்று காலை வந்தார்.
அவர் விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் கன்னியாகுமரியில் படப்பிடிப்பில் இருந்து வந்துள்ளேன். மனம் வலிக்கிறது. விஜயகாந்த் பற்றி பேச எவ்வளோ இருக்கிறது. நட்புக்கு இலக்கணம். ஒரு முறை பழகிவிட்டால் வாழ்க்கை முழுக்க அதை மறக்கவே முடியாது. அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்.
அதனால்தான் அவருக்கு அத்தனை நண்பர்கள். அவருக்காக உயிரை கொடுக்கக் கூட தயாராக இருந்தனர். நண்பர்கள், அரசியல்வாதிகள், ஊடகங்கள் மீது கோபப்படுவார். ஆனால் அவர் மீது யாரும் கோபப்படமாட்டார்கள். காரணம் அவருடைய கோபத்தில் சுயநலம் இருக்காது. தைரியத்துக்கும் வீரத்திற்கும் இலக்கணமானவர். அவரை பற்றி சொல்ல எனக்கு இரு விஷயங்கள் உள்ளன.
அதாவது நான் சுயநினைவை இழந்து ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன். அப்போது ரசிகர்கள், பொதுமக்கள், மீடியாக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அப்போது என் உடல்நலம் குறித்து விசாரிக்க விஜயகாந்த் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது அவர் என்ன செய்தாரோ எனக்கு தெரியாது.
ஒரு 5 நிமிடத்தில் அத்தனை கூட்டத்தையும் கலைத்துவிட்டார். அது மட்டுமல்லாமல் என் அறைக்கு பக்கத்திலேயே ஒரு அறை போடுங்கள். யார் வருகிறார்கள் என நான் பார்க்கிறேன் என சொன்னார். அதை மறக்கவே முடியாது (நா தழுதழுக்கிறார்). இன்னொரு சம்பவம், மலேசியா, சிங்கப்பூரில் நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக கலைநிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம்.
அப்போது எல்லாரும் பேருந்தில் ஏறிவிட்டார்கள். நான் வர தாமதமாகிவிட்டது. என்னை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டார்கள். என்னால் அந்த இடத்தை விட்டு நகரவே முடியவில்லை, இதையடுத்து பேருந்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த விஜயகாந்த் இறங்கி வந்தார். அவர் வைத்திருந்த டவலை கொண்டு ஒரு இரண்டு நிமிடத்தில் பாதி கூட்டத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
அப்படி உடல்பலம் கொண்ட ஒரு மனிதனை கடைசி நாட்களில் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது. கேப்டன் அவருக்கு பொருத்தமான பெயர். 71 பால்களில், நூற்றுக்கணக்கான சிக்சர்களை குவித்து, மக்களை மகிழ்வித்து விக்கெட்டை இழந்து இந்த உலகம் என்னும் ஃபீல்டை விட்டு போய்விட்டார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்கள் மனதில் நிற்பவர் யார்? விஜயகாந்த் போன்றோர்தான். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications