அரசியலுக்கு விடை சொல்லும் முடிவுக்கு வந்து விட்டாரா ரஜினிகாந்த்.. நடப்பது என்ன?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனைவரது எதிர்பார்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசியலுக்கு இனி வரப்போவதில்லை என்கிற அறிவிப்பையே ஆகஸ்ட்டில் வெளியிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்கிற எதிர்பார்ப்பு 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது. 1990களில்தான் ரஜினிகாந்த் இதற்கான சமிக்ஞையையே வெளிப்படுத்தினார்.
குறிப்பாக 1996 சட்டசபை தேர்தலில் பகிரங்கமாகவே ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் களத்தில் இருந்தார். ரஜினி அப்போது கொடுத்த வாய்ஸ், திமுகவை அரியாசனத்தில் அமரவும் வைத்தது. ஆனால் பொலிட்டிக்கல் மிராக்கிள் எப்போதுமே நடந்து கொண்டே இருப்பதும் இல்லை என்பது ரஜினி விஷயத்தில் விதி விலக்கும் அல்ல.

ஈர்ப்பு இருந்தது
ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தபோது இதே தமிழக மக்கள் நிராகரித்தனர். பாமகவுக்கு எதிராக குரல் கொடுத்த போதும் தமிழகம் நிராகரித்தது. ரஜினியின் குரல்களை அதிக முறை தமிழகம் செவிகொடுத்து கேட்க தயாராக இல்லை என்பது வரலாறு. ஆனாலும் சூப்பர் ஸ்டார் என்கிற பிம்பத்தின் மீதான அரசியல் ஈர்ப்பு இருந்து வந்தது.

வெற்றிடத்தால் வேகம்
ஜெயலலிதா, கருணாநிதி எனும் ஆளுமைகள் மறைந்த நிலையில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதைப் போல ரஜினிகாந்த் உணர்ந்தார். அதனையே பல இடங்களிலும் சுட்டிக்காட்டிப் பேசினார். அந்த வெற்றிடத்தை நிரப்பக் கூடிய வல்லமை கொண்ட சக்தி தாமே என எதன்பொருட்டோ அவருக்கும் ஒரு நம்பிக்கை பிறந்தது. அதனாலேயே அரசியலுக்கு வரப் போகிறேன்- தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்றார்.

தள்ளிப்போன கட்சி திட்டம்
ஆனால் எந்த காரணத்துக்காகவோ இந்த நிலைப்பாட்டில் தொடர்ந்து ரஜினியால் நிற்கவும் முடியவில்லை. ஒருகட்டத்தில் நான் முதல்வர் வேட்பாளரே இல்லை என ஆதரவாளர்கள், ரசிகர்களின் நம்பிக்கை மீது அணுகுண்டையே வீசினார் ரஜினிகாந்த். அப்போதே ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் மீதான சந்தேக ரேகைகள் படியத் தொடங்கின. பின்னர் கொரோனா லாக்டவுனை முன்வைத்து ரஜினியின் அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் தள்ளி போனது.

கொரோனா லாக்டவுன்
இப்போது கொரோனா வைரஸ் அவ்வளவு எளிதாக ஒழிந்துவிடக் கூடியதாகவும் இல்லை. இனி கட்சி, பொதுக் கூட்டங்கள் என்பது எப்போது சாத்தியம் என்பது தெரியவில்லை. அதுவும் உடல்நலன் ஏற்கனவே பாதிக்கப்பட்டு நலமுடன் திரும்பி வந்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், கொரோனா அச்சுறுத்தல் காலத்தில் இறங்கி மக்களிடம் வேலை செய்வது என்பதற்கான சாத்தியங்களுக்கு வாய்ப்பே இல்லை என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் திட்டவட்டமாக கூறுகின்றன.

குட்பை சொல்ல முடிவா?
எப்படி தாம் முதல்வர் வேட்பாளரே இல்லை என்று அதிரடியாக ரஜினி அறிவித்தாரோ. அதேபோல்தான் அடுத்த மாதம் அனேகமாக ஒரு முக்கியமான அறிவிப்பை ரஜினி வெளியிடலாம் என கூறப்படுகிறது. அதாவது தமது உடல்நலன் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி தம்மால் நேரடி அரசியலில், தனி கட்சி அரசியலில் ஈடுபட விரும்பினாலும் சூழ்நிலை சரியாக இல்லை- அதற்கான வாய்ப்புகளே இனி இல்லை- ஆகையால் அரசியலுக்கு குட்பை சொல்லிவிடுவார் என்கின்றன அவரது நெருங்கிய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications