பேரறிவாளன் திடீரென மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம்? வெளியான முக்கிய தகவல்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, தற்போது பரோலில் உள்ள பேரறிவாளன், சிறுநீரக கோளாறு மற்றும் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

49 வயதாகும் பேரறிவாளனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முதலில் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டிருந்தார், அதைத் தொடர்ந்து பேரறிவாளன் கடந்த மே 28ஆம் தேதி, சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிறுநீரக கோளாறு மற்றும் வயிற்று வலி தொடர்பாகப் பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவச் சிகிச்சையைத் தொடர்ந்து அளித்தால் தான் நல்லது என மருத்துவர்கள் கூறுவதால் பரோலை நீட்டிக்க வேண்டும் என அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து தொடர்ந்து நான்கு முறை பேரறிவாளனின் பரோலை நீட்டித்து தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
சிறுநீரகத் தொற்று, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வரும் பேரறிவாளனை உள் நோயாளியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அப்போது தான் முறையாகச் சிகிச்சை அளிக்க முடியும் என மருத்துவர்கள் பரிந்துரை அளித்திருந்தனர். இதையடுத்து இன்று பேரறிவாளன் விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்குக் கடந்த நான்கு மாதங்களாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது பரோல் காலம் இம்மாத இறுதியுடன் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications