“டேஞ்சர்”.. குழந்தையுடன் எச் ராஜா செயல்! இப்படி பட்டாசு வெடிக்காதீங்க! திமுக ராஜீவ் காந்தி வார்னிங்
சென்னை: பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குழந்தையை கையில் தூக்கி வைத்தபடி பட்டாசு வெடித்த புகைப்படத்தை பகிர்ந்த திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜிவ் காந்தி இதுபோன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என்று எச்சரித்து உள்ளார்.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் வாழும் இந்து மக்களால் அக்டோபர் 24 ஆம் தேதியான இன்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
முன்னதாக சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் புத்தாடைகள், பட்டாசுகள், தீபாவளி பண்டிக்கைக்கு தேவையான உணவு, பூஜை பொருட்களை வாங்குவதற்காக கடைகள், வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதினர்.

படையெடுக்கும் மக்கள்
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தலைநகர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ஏராளமான மக்கள் படையெடுத்து உள்ளனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

தீபாவளி வாழ்த்து
இது ஒருபக்கம் இருக்க தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தொடங்கில் இந்திய அளவில் உள்ள பல கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், அமைச்சர்கள் என அனைவரும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

வாழ்த்தும் அறிவுரையும்
நேற்று தீபாவளி வாழ்த்து தெரிவித்து எச்.ராஜா வெளியிட்டு இருந்த வீடியோவில் மக்கள் அனைவரும் அதிகளவில் பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும், பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்கவும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் இன்று தனது தீபாவளி வாழ்த்தை ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர் 2 படங்களையும் பகிர்ந்துள்ளார்.

குழந்தையோடு பட்டாசு
அந்த 2 புகைப்படங்களிலும் எச்.ராஜா சாலையில் பட்டாசு வெடிக்கும் காட்சி இடம்பெற்று உள்ளது. ஒரு கையில் பட்டாசு திரியை கீழே குணிந்து கொளுத்தும் எச்.ராஜா மற்றொரு கையில் குழந்தையை தூக்கிக்கொண்டு நிற்கிறார். இந்த நிலையில் திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜிவ் காந்தி ட்விட்டரில் இதனை விமர்சித்து உள்ளார்.

ராஜிவ் காந்தி
எச்.ராஜா குழந்தையோடு பட்டாசு வெடிக்கும் படத்தை பகிர்ந்துள்ள அவர், "அன்பான வேண்டுகோள்!! பட்டாசு வெடிக்கும் போது கீழ் உள்ள புகைபடத்தில் உள்ளது போல் குழந்தைகளை அருகிலோ, கையிலோ வைத்துக் கொண்டு வெடிக்காதீர்! அச்செயல் நமக்கும், குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் ஆபத்தான சூழ்நிலையினை உண்டு செய்யும்." என்று எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications