விடுதலை செய்யாவிட்டால் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பார்.. வக்கீல் பரபரப்பு பேட்டி
Recommended Video

சென்னை: விடுதலை செய்ய ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பார் என்று, வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் தமிழக அமைச்சரவை தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியது. ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அந்த கடிதம் மீது நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தங்களை விடுதலை செய்யக்கோரி வேலூர் மத்திய சிறையில் நேற்று முன்தினம் முருகன் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர் சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் முருகன் உண்ணாவிரதத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொண்டார். இதையடுத்து, முருகனை சந்திப்பதற்காக அவரது வழக்கறிஞர் புகழேந்தி இன்று வேலூர் மத்திய சிறைக்கு வருகை தந்தார். அங்கு அவர் முருகன் மற்றும் நளினியை தனித்தனியாக சந்தித்து விட்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததாக தகவலைக் கேள்விப்பட்டு அவரைப் பார்ப்பதற்காக வந்தேன். கடந்த 19ம் தேதி முருகன், தமிழக ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை செய்த புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கிற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதன் மீது நான்கு மாதங்களாக நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறீர்கள்.

வேண்டுமென்றால் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விஷயத்தில் நீங்கள் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த வழக்கிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபிக்க தயாராக உள்ளோம். எனவே எங்களை விடுதலை செய்ய உத்தரவிடுங்கள். இல்லை என்றால் உண்ணாவிரதம் இருந்து மரணமடைய அனுமதி கொடுங்கள் என மனுவில் கூறியுள்ளார்.
சிறை கண்காணிப்பாளர், முருகனிடம், தங்கள் மனுவை நிச்சயம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கிறோம் என கூறியதால் தற்காலிகமாக இந்த உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று உள்ளார். தற்போதுகூட ஆளுநர் இந்த விவகாரத்தில் விரைவில் முடிவு எடுப்பார் என முருகன் நம்பிக்கையுடன் உள்ளார். அப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் முருகன் மீண்டும் சிறையில் உண்ணாவிரதம் இருப்பார். இவ்வாறு வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications