ஆதரிக்க யாரும் இல்லை.. அன்புகாட்டும் ஜிஹெச்… இந்தியாவுக்கே ரோல் மாடல்!
சென்னை: சத்தம் போடாமல் சாதனை செய்து வருகிறது நம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை. ஏதாவது சின்ன உடல்நலக் குறைவு என்று தனியார் மருத்துவமனைக்குப் போனால், வாழ்நாள் முழுக்க உழைத்துச் சேர்த்த மொத்த சொத்தையும் உருவிவிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட உலகத்தில் நமக்கு இன்று உறுதுணையாக இருக்கும் நல்ல உள்ளம் படைத்த மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில்தான் இருக்கிறார்கள் என்ற உண்மையை மீண்டும் நமக்குப் புரியவைத்திருக்கிறது இந்த மருத்துவமனை.

கடந்த சிலவாரங்கள் முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் வயதான முதியவர் ஒருவர் சாலையோரத்தில் காதுகளில் புழுக்கள் நெளிய, சிகிச்சை அளிக்க யாரும் இல்லாமல் ஆதரவற்று கிடந்தார்.
நல்ல உள்ளம் கொண்ட சமூக ஆர்வலர் ஒருவர் அந்த முதியவரைத் தூக்கிக் கொண்டு போய் அருகிலிருந்த ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்திருந்தார். இந்தக் காட்சிகள் அனைத்தும் வீடியோவில் காட்சிப்படுத்தப் பட்டிருந்தது.

அது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவரது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மனநலம் குன்றிய நிலையில் சாலையோரம் ஷம்பு என்பவர் கவனிப்பாரற்று படுத்துக் கிடந்தார். அவரின் உடலில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன.

தகவலறிந்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் அவருக்குப் பாதுகாப்பும் சிகிச்சையும் அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் சேவை மகத்தானது அவர்களின் மனிதநேயம் மெச்சத்தக்கது" என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்பின்னர் பலரது கவனம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் மீது விழுந்தது. அந்த முதியவரைப் போல இங்கே ஆதரவற்ற பலர் சிகிச்சை பெற்று வருவது வெளிச்சத்திற்கு வந்தது.

இவர்களுக்காகவே ராஜீவ்காந்தி மருத்துவமனையில் Rehabilitation ward செயல்பட்டு வருவது தெரியவந்தது. இவர்களுக்காக 50 படுக்கை வசதிகள் கொண்ட தனி வார்டு ஒன்று இங்கே உருவாக்கப்பட்டுள்ளது தெரிந்தது. இங்கே சுழற்சி முறையில் மருத்துவர்களும் செவிலியர்களும் வருகை தந்து, தங்கி இருப்பவர்களுக்குச் சேவை புரிந்துவருகின்றார்கள்.

இத்தனை நல்ல உள்ள கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது. அரசின் இந்த முன்னெடுப்பு குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணி ராஜனிடம் பேசினோம். அவர், "இந்தியாவில் இந்த மாதிரியான Rehabilitation ward என்பது வேறு எங்கேயும் இல்லை. நாம்தான் முதன்முதலாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கி இருக்கிறோம். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்துவருகிறார். முதல்வரும் சிறப்பாக ஒத்துழைப்பு தந்துவருகிறார்.

இங்கே ஆதரவற்றவர்கள் முறையாகத் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் அளித்து வருகிறோம். இங்கே மருத்துவச் சிகிச்சைக்காக வருபவர்கள் சிலரை, உறவினர்கள் சிகிச்சையின்போது விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர். அவர்களைக் கவனிக்க ஆட்கள் இல்லை. சிகிச்சை முடிந்த பிறகு அவர்களை எங்கு அனுப்பமுடியாத சூழ்நிலை, இப்படி பல்வேறு இன்னல்களால் ஆளானவர்களை இந்த வார்டில் தங்கவைத்து, நாங்கள் கவனித்து வருகிறோம்.

அதைப்போலவே சாலையோரங்களில் ஆதரவற்று வாழ்ந்து வருபவர்களை சமூக ஆர்வலர்கள் சிலர் அழைந்துகொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். உறவினர்களே இல்லை என்று சொல்லி சிலர் இடம் கேட்டும் வருகிறார்கள்.

சமீபத்தில் சாலையோரத்தில் 70 வயதைக் கடந்த முதியவர் ஒருவரை மிகவும் மோசமான நிலையில் கொண்டுவந்து இங்கே சிகிச்சைக்காகச் சேர்த்தார்கள். ஒரு சமூக ஆர்வலர்தான் இரவு பத்தரை மணிக்குக் கொண்டுவந்து சேர்த்தார். உடனடியாக எங்களது மருத்துவர்கள் அந்த முதியவருக்குச் சிகிச்சை அளித்தார்கள்.

அந்த முதியவரை அழைத்து வந்தபோது அவர் காதுகளுக்குள் புழு வைத்து சீழ்ப் பிடித்திருந்தது. மிக மோசமான நிலையில் அவர் இருந்தார். அவரை முதலில் குளிக்கவைத்து, புதிய உடைகளை வழங்கினோம். அதன்பிறகு அவருக்குக் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.
அதைப்போன்று அவரது ஒரு கண் முழுவதும் புழுக்கள் நெளிந்தன. அவசர பிரிவில் அனுமதித்து அதற்கும் தீவிர சிகிச்சை அளித்தோம். அதன்பிறகு அவரது உடல்நிலை உணவு உட்கொள்ளும் அளவுக்கு முன்னேறியது. அதன்பிறகு அவரை விசாரித்தபோது அவர் கோரக்பூர் என்று இந்தியில் சொன்னார். இப்போது அவர் நலமாக உள்ளார்" என்கிறார்.

தற்போது இங்கே 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உணவுகளும் மூன்று வேளையும் இலவசமாக வழங்கப்பட்டும் வருகிறது. அதேபோல் பால் முட்டையும் மூன்று வேளைகளும் வழங்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாது நோயாளிகளுக்கு பிசியோதெரபி, உடற்பயிற்சி ஆகியவை காலை, மாலை என இரு வேளைகளிலும் தரப்படுகின்றன.

வயதானவர்கள் எனில் அவர்களைச் செவிலியர்களே குளிக்க வைத்து உடை மாற்றி விடுகின்றனர். உணவையும் ஊட்டி விடுகின்றனர். மிகுந்த அக்கறையோடு செவிலியர்கள் தங்களுக்குப் பணிவிடை செய்வதாக இங்கே தங்கியுள்ள நோயாளிகள் தெரிவிக்கின்றனர். இங்கே 430 பேர் அனுமதிக்கப்பட்டு, அதில் 137 பேர் இதுவரை குடும்பங்களுடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
"இங்கே நான் வருந்து 1 வருடம் மேல் ஆகிறது. என்னால் உட்கார முடியாது. நடக்க முடியாது. கால் இரண்டும் செயல்படவில்லை. ஆகவே இங்கே வந்து சேர்ந்தேன். எனக்கு யாரும் இல்லை. என்னை இங்கே உள்ள செவிலியர்கள்தான் கவனித்துக் கொள்கிறார்கள்" என்கிறார் ஒரு முதியவர்.

"என் வீட்டிலிருந்து என்னைக் கவனித்துக் கொள்ள யாருமே வரமாட்டார்கள். அதற்கு சான்சே இல்லை. சொந்தம் பந்தம் எல்லோருமே இருக்கிறார்கள். ஆனால், அவர்களை நம்பி பிரயோஜனம் கிடையாது" என்கிறார் அத்திப்பட்டியில் இருந்து இங்கே வந்து சிகிச்சை பெறும் முதியவர் குமார்.
தொடர்ந்து பேசிய அவர், "காலையில் சத்தான உளுந்து கஞ்சி தருகிறார்கள். மூன்றுவேளையும் பால் மற்றும் முட்டை தருகிறார்கள். தரமான டிஃபன் தருகிறார்கள். நல்ல பழங்கள் கூட தருகிறார்கள். எந்தக் கவலையும் இல்லை. அப்படி உபசரிக்கிறார்கள்" என்கிறார் இந்த அத்திப்பட்டிக்காரர்.

இங்கே தங்கியுள்ள மூதாட்டி ஒருவர், "எனக்குப் பிள்ளைகள் கிடையாது. நானும் என் கணவரும் மட்டும்தான். பள்ளிக்கரணையில் உள்ள ஒரு வீட்டில் வாடகை இருந்தோம். வயதாகிவிட்டது. வருமானம் இல்லை. வாடகை கொடுக்கமுடியவில்லை. அதனால் இங்கே வந்துவிட்டோம். இங்கே ஒரு குறையும் இல்லை" என்கிறார்.
இந்தக் கதைகளைக் கேட்கும்போது மனதில் ரத்தம் வருகிறது நமக்கு. உண்மையில் நாம் மனிதாபிமானம் உள்ள மனிதர்கள்தானா எனச் சந்தேகம் எழுகிறது. குடும்பம் இல்லாமல் பல ஆதரவற்று வருகிறார்கள் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால் உறவினர்கள் இருந்து, அநாதைகளாக இருக்கிறார்கள் என்று சொல்லும் போது வேதனை மேலோங்குகிறது.
"நான் இந்த வார்டில் 3 வருடங்களாகப் பணியாற்றி வருகிறேன். இதற்கு முன்னால் இந்த வார்டு சர்ஜிக்கல் செப்டிக் வார்டாக இருந்தது. அதன்பிறகு கொரோனோ வார்டு ஆக மாற்றப்பட்டது. அதன்பிறகு கொரோனா 2வது அலை வருவதற்கு முன்பாக டீன் தினமும் ரவுண்ட்ஸ் போவார். அப்போதுதான் பலரும் ஆதரவற்ற நிலையில் தங்கியுள்ளதைப் பார்த்திருக்கிறார்.
ஒருநாள் முறையாக அனுமதி பெற்று இந்த வார்டை ஆதரவற்றவர்கள் வார்டாக மாற்றிவிட்டார். அதன்பிறகு இந்த வார்டுக்காக 6 செவிலியர்களை நியமித்தார். அப்போது முதல் இங்கேதான் நாங்கள் பணி செய்கிறோம்" என்கிறார் ஒரு செவிலியர்.












Click it and Unblock the Notifications