தனிப்படை தேடாமலேயே வான்ட்டடாக தலைமறைவான தவெக ராஜ்மோகன்! 11 நாள் கழித்து 41 பேருக்கு அஞ்சலியாம்!
சென்னை: கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் சம்பந்தமே இல்லாமல் (சட்ட ரீதியாக அதாவது அவர் மீது வழக்கே பதிவு செய்யப்படவில்லை) தலைமறைவாக இருந்தும் வரும் ராஜ்மோகன், 11 நாட்கள் கழித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக நிர்வாகி ராஜ்மோகன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: வேதனையில் இருந்து மீள முடியவில்லை. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.

இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும். நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது.
பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுத் தருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம். இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கரூரில் கடந்த 27ஆம் தேதி தவெக சார்பில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விஜய் பேசிக் கொண்டிருந்த போது நெரிசலால் 41 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என சொல்லப்பட்ட நிலையில் 27 ஆயிரம் பேர் வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தவில்லை என்று தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர்களை தனிப்படை போலீஸார் தேடி வருகிறார்கள். இதனால் முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் இருவரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் 27ஆம் தேதி கரூர் சம்பவம் நடந்ததும் அங்கிருந்து வந்து நீலாங்கரை வீட்டிற்குள் போன விஜய், இதுவரை கரூருக்கு செல்லவில்லை. இந்த சம்பவம் நடந்து 3ஆவது நாளில் வீடியோவில் தோன்றி இரங்கல் தெரிவித்தார்.
அது போல் கரூர் சம்பவம் நடந்து 10 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடியோ காலில் விஜய் பேசி ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் தவெக நிர்வாகி ராஜ்மோகன் என்பவரும் தலைமறைவாகியுள்ளார். அவர் மீது போலீஸார் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. ஆனாலும் அவர் தலைமறைவாகிவிட்டார்.
அவரை சுற்றி நிறைய மீம்ஸ்கள் உலா வருகின்றன. அதில் "கட்சியே தேடாத ராஜ்மோகனை தனிப்படை தேடுவதாக நினைத்துக் கொண்டு அவர் ஒளிந்து கொண்டிருக்கிறார்" என மீம்ஸ்கள் சமூகவலைதளத்தில் கொட்டி கிடக்கின்றன. இந்த நிலையில் சரியாக 11 நாட்கள் கழித்து ராஜ்மோகன், 41 பேருக்கு அஞ்சலி என பதிவிட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications