ராஜ்ய சபா இடைத்தேர்தல்.. தவெக ஆதரவுடன் டெல்லி செல்லும் பிரவீன் சக்கரவர்த்தி? தராசு ஷ்யாம் கருத்து!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்ற அதிமுகவின் சிவி சண்முகம், தனது ராஜ்ய சபா எம்பி பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் காலியான அந்த ஒரு இடத்திற்கு வரும் ஜூன் 18 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தல், தமிழக அரசியலில், டெல்லி நகர்வுகளையும் மாற்றி அமைக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் பேசுகையில், ஒரே ஒரு இடத்திற்கான மாநிலங்களவை இடைத்தேர்தல் என்பதால், சட்டசபை உறுப்பினர்களின் ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையிலேயே வெற்றி தீர்மானிக்கப்படும். தற்போதைய சூழலில் தவெக கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது. அதிமுகவின் ஒரு பிரிவும் கூட தவெகவை ஆதரித்திருக்கிறது.

மொத்தமாக தவெக-வுக்கு ஆதரவாக 144 எம்எல்ஏ-க்களின் பலம் உள்ளது. எனவே, தவெக ஆதரவு அளிக்கும் வேட்பாளரே இந்த இடைத்தேர்தலில் மிக எளிதாக வெற்றி பெற முடியும். இந்த இடைத்தேர்தலில் தவெக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி வேட்பாளராக நிறுத்தப்படலாம் என டெல்லி மற்றும் கோட்டை வட்டாரங்களில் பலத்த பேச்சு அடிபடுகிறது.
ஏனென்றால் விஜய்யை நோக்கி காங்கிரஸ் கட்சி திரும்புவதற்கு பிரவீன் சக்கரவர்த்தி முக்கிய காரணம். தவெக இந்த ராஜ்ய சபா எம்பி பதவியை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்தால், அது சரியான மூவாக இருக்கும். இது முழுமையான பதவிக்காலம் இல்லாத, மீதமுள்ள சில காலத்திற்கான எம்பி பதவி மட்டுமே. திமுக கூட்டணியை உடைத்துக்கொண்டு முதலில் வந்து தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தந்தது.
இந்த குறுகிய கால எம்பி பதவியை பிரவீன் சக்கரவர்த்திக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம், எதிர்காலத்தில் வரவிருக்கும் முழு பதவிக்கால ராஜ்ய தேர்தல்களில் காங்கிரஸின் முழு ஆதரவைப் பெற்று, தவெக தங்களின் சொந்த எம்பிக்களை டெல்லிக்கு அனுப்ப முடியும். இந்த இடைத்தேர்தல் நகர்வு என்பது வெறும் தமிழ்நாட்டோடு முடிந்துவிடவில்லை, இதன் பின்னணியில் மாபெரும் டெல்லி கணக்கு ஒன்று உள்ளது.
தேசிய அளவில் பாஜக-வுக்கு எதிரான 'இந்தியா' கூட்டணியில் இனி திமுக நீடிக்குமா என்பது மிகப்பெரிய சந்தேகமாக எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக-வை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தை 'இந்தியா' கூட்டணிக்குள் கொண்டு வர காங்கிரஸ் தலைமை தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதற்கு இந்த ராஜ்யசபா இடைத்தேர்தல் ஒரு மிகச்சிறந்த 'அச்சாரமாக' அமையும்.
திமுக மற்றும் அதிமுக தரப்பில் போட்டி வேட்பாளர்களை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவாக இருப்பதால், தவெக ஆதரவோடு காங்கிரஸ் அல்லது தவெக-வின் நேரடி வேட்பாளர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவதாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications