இலவு காத்த கிளி.. 20 ஆண்டுகளாக தேமுதிகவுக்கு கனவாகவே தொடரும் எம்.பி பதவி.. 2013லும் மிஸ் ஆச்சு!
சென்னை: இப்போதும் தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டை அதிமுக ஒதுக்கவில்லை. கட்சி தொடங்கி 20 ஆண்டுகளாக தேமுதிகவுக்கு எம்.பி பதவி என்பது கனவாகவே தொடர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக வேட்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள்
அதிமுக சார்பில் என்.சந்திரசேகர் மற்றும் அதிமுக அணியில் இருந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரது பதவிக் காலமும் முடிவடைந்தது. இதனால் 2 மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக தீவிரமாக இருந்தது.
இந்த நிலையில் அதிமுகவின் வேட்பாளர்களை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கேபி முனுசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிமுகவின் மாநிலங்களவை எம்.பி வேட்பாளர்களாக மூத்த வழக்கறிஞர் இன்பதுரை மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ செய்யூர் தனபால் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முட்டி மோதிய தேமுதிக
அதிமுகவிடம் இருந்து எப்படியாவது ஒரு மாநிலங்களவை எம்.பி இடத்தைப் பெற்றுவிட வேண்டும் என தேமுதிக முயற்சித்தது. கடந்த லோக்சபா தேர்தலின்போது செய்த ஒப்பந்தப்படி தங்களுக்கு ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்க வேண்டியது அதிமுகவின் கடமை என பிரேமலதா விஜயகாந்த் கூறி இருந்தார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், தற்போதைய தேர்தலில் தேமுதிகவுக்கு எம்.பி சீட் இல்லை, அடுத்த தேர்தலில் வழங்குகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது.
2026ல் தேமுதிகவுக்கு சீட் - அதிமுக அறிவிப்பு
இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் ராஜ்யசபா வேட்பாளர்களை அறிவித்த அதிமுக துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமி, "அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடருகிறது. தற்போதைய மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் தரப்படவில்லை. 2026 தேர்தலில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தரப்படும்" எனத் தெரிவித்தார்.
தேமுதிகவை கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார் விஜயகாந்த். கட்சி தொடங்கி 20 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதுவரை தேமுதிக சார்பில் ஒருவர் கூட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனதில்லை. கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளிலேயே தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தாலும், டெல்லியில் தனது இடத்தை அக்கட்சியால் நிறுவ முடியவில்லை.
தேமுதிக எம்.பி கனவு
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் தேமுதிக 29 இடங்களில் வென்றிருந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் இருந்தார். அதன்பிறகு 2013 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றது. அப்போது தேமுதிகவுக்கு வேறு கட்சிகளைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏக்கள் ஆதரித்தால் ஒரு மாநிலங்களவை இடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால், அப்போது தேமுதிகவின் 7 எம்.எல்.ஏக்கள் அதிமுகவை ஆதரித்தனர்.
இதனால் தேமுதிக சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்ட அன்றைய தேமுதிக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் தோல்வி அடைந்தார். அதன் பிறகு தேமுதிக எந்த சட்டமன்ற தேர்தல்களிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ராஜ்யசபா வாய்ப்பும் கிடைக்கவில்லை. அத்தனை லோக்சபா தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை.
20 ஆண்டுகளாக
இத்தனை ஆண்டு காலமாக எம்.பி பதவி என்பது எட்டாத கனவாகவே இருந்து வந்தது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் தான் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவைக்கு தேமுதிக சார்பாக விஜயகாந்த்தின் மைத்துனர் சுதீஷ் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இப்போதும் அதிமுக, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கவில்லை. 2026ல் ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. ஆக, தேமுதிகவின் எம்.பி கனவு 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இன்னும் நிறைவேறியபாடில்லை.












Click it and Unblock the Notifications