இன்று ராமதாஸ் நீதிமன்றத்துக்கு வரவில்லை.. உடல் நலக் குறைவால் வர இயலவில்லை என நீதிபதிக்கு கடிதம்!
சென்னை: சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேண்டுகோளை ஏற்று, அன்புமணி இன்று மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு வர சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக ராமதாஸ் நீதிமன்றத்திற்கு வரவில்லை என அவரது வழக்கறிஞர் வி.எஸ்.கோபு தெரிவித்துள்ளார்.
ராமதாஸ், அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் - அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17 ல் நடக்கும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். போட்டிக்கு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பும் அறிவித்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் நாளை நடத்த உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 8) ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
"இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5:30 மணிக்கு ராமதாஸ், அன்புமணி இருவரும் எனது அறைக்கு வர வேண்டும். உடனே ராமதாஸை கிளம்ப சொல்லுங்கள், இது எனது வேண்டுகோள். அனைவரின் நலனுக்காகவும், பாமக நலன் கருதியும், இருவரிடமும் நானே பேச்சுவார்த்தை நடத்தப் போகிறேன்.
இருவரிடமும் பேசும் போது கட்சிக்காரர்கள், வழக்கறிஞர்கள் யாரும் உடன் இருக்கக் கூடாது. நீதிமன்ற வேலை நேரம் முடிந்ததும், இருவரும் எனது அறைக்கு வர வேண்டும்." என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இந்த தகவலை, அவரது வழக்கறிஞர்கள், ராமதாஸிடம் தெரிவித்தனர். அதனை ஏற்று இன்று மாலை நீதிமன்றத்துக்கு வருவதாக ராமதாஸ் தெரிவித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அன்புமணியும், நீதிமன்றத்திற்கு வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அழைப்பு விடுத்த நிலையில், உடல் நலக் குறைவால் வர இயலவில்லை என நீதிபதியிடம் கடிதம் தரச் சொல்லி ராமதாஸ் கூறியுள்ளதாக வழக்கறிஞர் வி.எஸ்.கோபு தெரிவித்துள்ளார்.
கடந்த பல மாதங்களாக பாமகவில் நிலவி வரும் பூசலுக்கு மத்தியில் நீதிபதியின் இந்த உத்தரவு பாமகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பிவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை இந்தச் சந்திப்பு நடக்காது எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications