விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பணமோசடி! தமிழக டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
சென்னை: விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடி செய்வதாக தேர்தல் ஆணையம், தமிழக டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். மேலும் எனது பெயரையும் கட்சி பெயரையும் பயன்படுத்த அன்புமணிக்கு உரிமை இல்லை என்றும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் தனது புகாரில் கூறியிருப்பதாவது: விருப்ப மனு என்ற பெயரில் அன்புமணி பண மோசடி செய்கிறார். விருப்ப மனு அளிக்க பாமக நிறுவனராகிய எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. பாமக பெயரையோ கட்சியையோ பயன்படுத்த அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

பாமக கட்சி சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் தமிழகம், புதுவையில் போட்டியிட விரும்புபவர்கள் 14ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அன்புமணி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் டிசம்பர் 14ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என மருத்துவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்தல்களில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வருகின்ற 14ம் தேதி ஞாயிற்றுக் கிழமை முதல் 20ம் தேதி சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சி தலைவர் அலுவலகத்தில் மேற்குறிப்பிடப்பட்ட நாட்களில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். போட்டியிட விருப்பம் தெரிவிப்பதற்கான விண்ணப்பங்களை வாங்குபவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான டிசம்பர் 20-ம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை நிரப்பி, பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகியிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் பாமக சார்பில் அன்புமணி தரப்பு விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் ராமதாஸ் தரப்பினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் போக்கு ஏற்பட்டு, அவரை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். எனினும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை நான்தான் தலைவர் என கூறிக் கொள்ளும் அன்புமணி, கட்சி சார்பில் பொதுக் குழுக்களை கூட்டுகிறார், தற்போது விருப்பமனுக்களை பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கிறார். இந்த நிலையில் தேர்தல் ஆணையமும், கட்சியும் சின்னமும் அன்புமணியிடம்தான் இருக்கிறது என தெரிவித்துள்ள நிலையில் ராமதாஸ் இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications