“கரூர் சம்பவத்துக்கு முதல்வர் எப்படி காரணமாக முடியும்?” விஜய்க்கு ராமதாஸ் கேள்வி!
சென்னை: "கரூர் சம்பவத்திற்கு முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? முதல்வர் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், "கரூரில் நடந்தது போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் கட்சிகள் இனி பார்த்துக்கொள்ள வேண்டும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மொத்தம் 41 பேர் பலியாகினர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் கரூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில், கரூர் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன், நகர பொறுப்பாளர் பவுன் ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் ஒரு பதிவைப் பதிவிட்டு, பிறகு அதனை நீக்கினார். அது தொடர்பாகவும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் நடந்த 3வது நாளில் தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், "சி.எம் சார், பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், மக்கள் மேல் கை வைக்காதீங்க. நான் ஒன்று எனது வீட்டில் அல்லது அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். எனது அரசியல் பயணம் இன்னும் வலிமையாக தொடரும்" எனப் பேசி இருந்தார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "கரூர் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் சம்பவத்திற்கு முதல்வர் எப்படி காரணமாக இருக்க முடியும்? முதல்வர் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "கரூரில் நடந்தது போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் இனி பார்த்துக்கொள்ள வேண்டும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவல்துறை வழிகாட்ட வேண்டும்" என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications