இது தான் தமிழ் சமூகத்திற்கு நீங்கள் செய்யும் கைம்மாறு! பரப்புரை செய்க! இறையன்புக்கு ராமதாஸ் அழைப்பு!
சென்னை: மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்கு இறையன்பு பிரச்சாரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தான் உங்களை வளர்த்தெடுத்த தமிழ்ச்சமூகத்திற்கு நீங்கள் செய்யும் கைம்மாறாக அமையும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக இறையன்புக்கு ராமதாஸ் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு;

''தமிழக அரசின் தலைமைச் செயலாளராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள வெ.இறையன்பு அவர்கள், எந்த அரசு பதவியையும் ஏற்கப் போவதில்லை என்றும், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்கப் போவதாகவும் அறிவித்திருக்கிறார். அவர் எடுத்திருப்பது மிகவும் சரியான முடிவு. அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டின் இளைஞர் சமுதாயம் மது, புகையிலை, போதைப் பொருட்கள் ஆகிய முப்பெரும் அரக்கர்களிடம் சிக்கி சீரழிந்து வருகிறது. முப்பெரும் தீமைகளிடமிருந்து இளைஞர்களைக் காக்க அரசியல்ரீதியாக பாட்டாளி மக்கள் கட்சி போராடிக் கொண்டிருக்கிறது.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் அக்கறைக் கொண்டிருக்கும் வெ.இறையன்பு அவர்கள், மது, புகையிலை, போதைப் பொருட்களின் தீமைகளில் இருந்து இளைஞர்களை காப்பதற்காக அவர் வழியில் பரப்புரை செய்ய வேண்டும்; பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது அவரை வளர்த்தெடுத்த தமிழ்ச்சமூகத்திற்கு அவர் செய்யும் கைம்மாறாக அமையும்.'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications