Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 மடங்கு கட்டணம் உயரும்.. பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்ற ராமதாஸ் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இயக்கப்படும் 23 பயணிகள் ரயில்கள் உட்பட நாடு முழுவதும் 508 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றும் திட்டம் கண்டிக்கத்தக்கது என்றும், இதை உடனே கைவிட வேண்டும் என்றும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவதுL "தமிழ்நாட்டில் இயக்கப்படும் 23 பயணிகள் ரயில்கள் உட்பட நாடு முழுவதும் 508 பயணிகள் ரயில்களை (Passenger Trains) விரைவு ரயில்களாக (Express Trains) மாற்றும்படி ரயில்வே துறைக்கு இந்திய ரயில்வே வாரியம் ஆணையிட்டிருக்கிறது. பயணிகள் நலனைக் கருத்தில் கொள்ளாமல் வணிக நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கதாகும்.

அனைத்து மண்டல ரயில்வே துறைகளுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள ஜூன் 17 ஆம் தேதியிட்ட ஆணையில், 200 கி.மீ. தொலைவுக்கும் கூடுதலாக இயங்கும் அனைத்துப் பயணிகள் ரயில்களும் விரைவு ரயில்களாக மாற்றப்பட வேண்டும் என்றும், அவ்வாறு மாற்றப்பட்டது தொடர்பான அறிக்கை இன்றைக்குள் (ஜூன் 19) தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரயில்களின் நிறுத்தங்களைக் குறைத்தும், வேகத்தை அதிகரிப்பதன் மூலமும் அவை விரைவு ரயில்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் இந்திய ரயில்வே வாரியம் ஆணையிட்டிருக்கிறது.

24 ரயில்கள் தமிழகத்திற்குள்

24 ரயில்கள் தமிழகத்திற்குள்

ரயில்வே வாரியத்தின் ஆணைப்படி தெற்கு ரயில்வே துறையில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 17 வழித்தடங்களில் சென்று வரும் 34 ரயில்கள் விரைவு ரயில்களாக மாற்றப்படும். இவற்றில் 24 ரயில்கள் தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், தமிழகத்திலிருந்து கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இயக்கப்படுபவை ஆகும். இந்தப் பயணிகள் ரயில்கள் அனைத்தும் எப்போதும் அதிக பயணிகளுடன் பயணிக்கக் கூடியவை ஆகும். மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற இந்தப் பயணிகள் ரயில்களின் சேவை இப்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு விலக்கப்பட்ட பிறகு அவை அனைத்தும் அதிக கட்டணத்துடன், அதிக வேகத்துடன் கூடிய விரைவு ரயில்களாக இயக்கப்படும்.

பயண கட்டணம் உயரும்

பயண கட்டணம் உயரும்

இந்திய ரயில்வே வாரியத்தின் இந்த முடிவு ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்கு எதிரானது ஆகும். ஏழை மற்றும் ஊரக மக்களின் போக்குவரத்து வாகனங்களாகத் திகழ்பவை பயணிகள் ரயில்கள்தான். பேருந்துகளிலும், விரைவு ரயில்களிலும் பயணிக்க வசதியில்லாத மக்களுக்கு பயணிகள் ரயில்தான் பெரும் வரப்பிரசாதம் ஆகும். உதாரணமாக, விழுப்புரத்திலிருந்து 335 கி.மீ. தொலைவில் உள்ள மதுரைக்கு சாதாரண விரைவு ரயில்களில் பயணிக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் ரூ.255 கட்டணம் செலுத்த வேண்டும். சாதாரணப் பேருந்தில் பயணிக்க குறைந்தபட்சக் கட்டணம் ரூ.297 ஆகும். ஆனால், பயணிகள் ரயிலில் 65 ரூபாயில் எளிதாகக் பயணிக்க முடியும்.

5 மடங்கு கட்டணம் உயரும்

5 மடங்கு கட்டணம் உயரும்

அதேபோல், விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு 265 கி.மீ. தொலைவாகும். இதற்கு விரைவு ரயிலில் பயணிக்க ரூ.230, பேருந்தில் பயணிக்க ரூ.275 கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், பயணிகள் ரயிலில் பயணிக்க ரூ.55 மட்டும் தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதனால் இந்த ரயில்களைத் தங்களுக்கு மிகவும் நெருக்கமான வாகனங்களாக மக்கள் கருதுகிறார்கள். இந்த ரயில்களில் பயணிப்பது ஏழை மக்களுக்கு செலவு இல்லாததாக இருந்து வருகிறது. இனி இந்த ரயில்களில் பயணிக்க மக்கள் 5 மடங்கு வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இது ஏழைகளின் ரயில் பயண உரிமையைப் பறிக்கும் செயலாக அமைந்து விடக் கூடும். இது என்ன நியாயம்?

அடித்தட்டு மக்களுக்கானது

அடித்தட்டு மக்களுக்கானது

இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே விரைவு ரயில்களும் அதிவிரைவு ரயில்களும் இயக்கப்பட்டன. 1956-ம் ஆண்டிலேயே குளிரூட்டப்பட்ட ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்பிறகும் ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்ட போதிலும் ஒருபுறம் முன்பதிவு வசதி கூட இல்லாத பயணிகள் ரயில்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கும் கூடுதலாகக் கூட இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 500 கிலோ மீட்டர் தொலைவை 5 மணி நேரத்தில் கடக்கும் அளவுக்கு விரைவு ரயில்கள் வந்தாலும் கூட, அந்தத் தொலைவை இரு நாட்களில் கடக்கும் பயணிகள் ரயில்கள் இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதனால் மற்ற விரைவு ரயில்களின் இயக்கத்துக்கு சில தடங்கல்கள், வருவாய் இழப்பு என பல பாதிப்புகள் இருந்தாலும் கூட, அவை தொடர்ந்து இயக்கப்படுவதற்குக் காரணம், இந்தியாவின் அடித்தட்டு கிராம மக்கள் மீது அரசாங்கம் காட்டும் அக்கறை ஆகும். அந்த அக்கறையை லாப நோக்கமோ, வல்லுநர் குழு பரிந்துரைகளோ பறித்து விட முடியாது. அவ்வாறு பறித்தால் அது மக்கள் நலனுக்கான அரசாங்கமாக இருக்க முடியாது.

கைவிட வேண்டும்

கைவிட வேண்டும்

எனவே, மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு 200 கிலோ மீட்டர் தொலைவுக்கும் கூடுதலாக இயக்கப்படும் பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மாற்றும் திட்டத்தை இந்திய ரயில்வே வாரியம் கைவிட வேண்டும். ஏழைகளும் இந்தியாவின் பங்குதாரர்கள் என்பதை அங்கீகரிக்கும் வகையில், பயணிகள் ரயில்களை கூடுதல் வசதிகளுடன் தொடர்ந்து இயக்க வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+