வேற வழி இல்ல.. அன்புமணி எடுக்கும் பிரம்மாஸ்திரம்! உச்சகட்ட பரபரப்பில் பாமக! ராமதாஸ் சகாப்தம் ஓவர்?
சென்னை: பாமக மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், 'கமா' வைத்து மீண்டும் தொடங்கி இருக்கிறார் ராமதாஸ். தந்தை மகனை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவரான பாலுவை நீக்குவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் பாலுவே தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ். தனது அரசியல் வாரிசாக வர வேண்டும் என அன்புமணியை அவர்தான் முன்னிறுத்தினார். தற்போது அவரையே ஓரம் கட்டுவது போல் இருக்கிறது ராமதாஸ் செயல்பாடுகள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்குவதாக அறிவித்தார். அதிலிருந்து தந்தை மகன் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. மேலும் அன்புமணியின் ஆதரவாளர்களான திலகபாமா உள்ளிட்டோரை நீக்குவதாக அறிவித்ததோடு மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களையும் நீக்குவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

பாமகவில் மோதல்
இதுவரை 55 நிர்வாகிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உச்சகட்டமாக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவரான பாலுவை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தது பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ராமதாஸ் அன்பு மணியுடன் நெருக்கமாக இருக்கும் பாலு பல்வேறு முக்கிய வழக்குகளை திறம்பட கையாண்டவர். மேலும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர் சிறை செல்ல நேர்ந்த போது சட்டப் போராட்டம் நடத்தியவர்.
வழக்கறிஞர் பாலு
இந்த நிலையில் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற கருத்தை முன்வைத்து அவரை வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையிலிருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருக்கிறார். ஆனால் பொதுக்குழு கூடி சமூக நீதிப் பேரவையின் தலைவராக பாலுவே தொடர்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என மறைமுகமாக அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் புரவலராக அன்புமணி ராமதாஸ் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
தொடரும் குழப்பம்
இப்படி பாமக தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில், தந்தை மகனிடையே பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு செயல்பட்டு வந்தது. விரைவில் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் மீண்டும் நீக்க அறிவிப்புகளை வெளியிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு தடை ஏற்படுத்தி வருகிறார் ராமதாஸ். அன்புமணி ராமதாஸ் பஞ்சாயத்து எப்போது முடிவுக்கு வரும் என பாட்டாளி மக்கள் கட்சியினரே கேட்கும் அளவுக்கு வந்துவிட்டது.
அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்ட அளவில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொதுக்குழு நடத்தப்படும் என அன்புமணி அறிவித்திருக்கிறார். ஆனால் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், தலைவரை ராமதாஸ் நீக்கி வருகிறார். இதனால் கட்சியில் அதிகாரம் யாருக்கு என்ற கேள்வி தொண்டர்களிடையே எழுந்திருக்கிறது. பல முன்னாள் நிர்வாகிகளை மீண்டும் மாவட்ட தலைவர்களாகவும் செயலாளர்களாகவும் நியமித்து வருகிறார் ராமதாஸ். இப்படியாக குழப்பமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் கடைசி ஆயுதமாக பொதுக்குழுவை கூட்ட அனுமதி ராமதாஸ் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுக்குழு
தற்போது மாவட்ட பொதுக்குழு நடக்க இருக்கும் நிலையில் இடைப்பட்ட நாட்களில் மாநில பொதுக்குழுவை கூட்டி தானே தலைவராக இருப்பேன் என்பதை உறுதிப்பட சொல்ல இருக்கிறார். தற்போது பொதுக்குழு முடிவின்படி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற தலைவர் அன்புமணி தான். இந்த நிலையில் பொதுக்குழு கூட்டி நிறுவனருக்கான அதிகாரங்களை குறைத்து தீர்மானம் நிறைவேற்றலாம் எனவும் சொல்லப்படுகிறது.
அடுத்தது என்ன?
அதே நேரத்தில் அன்புமணி அந்த அளவுக்கு செல்ல மாட்டார், தந்தை மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். விரைவில் இருவரும் சந்தித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்கின்றனர் இரு தரப்பிலும் சமாதானம் பேசி வரும் பாமக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications