சனாதனம் குறித்து யார் பேசினாலும் இந்துக்கள் சிங்கம் போல் சீறணும்.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேச்சு
சென்னை: இந்து மதத்தை தவறாக பேசுபவர்களைக் கண்டு இந்துக்கள் சிங்கம் போல் சிலிர்த்து எழ வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்துள்ளார்.
இந்து மதத்திற்கு எதிராக யாராவது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தால் அதற்கு பதிலடி கொடுப்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர். ஆண்டாள் குறித்து கவிஞர் ஒருவர் தவறாக பேசியதாக சித்தரித்து கண்டனங்கள் குவிந்தன.

அப்போது கூட அந்த நபரை எதிர்த்து சடகோப ராமானுஜ சுவாமிகள் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது ஜீயர் கூறுகையில் இறை நம்பிக்கைக்கு எதிராக யார் பேசினாலும் இனி அமைதியாக போக மாட்டோம்.
கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்குத் தெரியும் என்றார். இது கடும் கண்டனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் இந்துக்கள் சிங்கம் போல் சிலிர்த்து எழ வேண்டும் என அவர் பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த திருப்பாவை முற்றோதுதல் மாநாட்டில் கலந்து கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயரான சடகோப ராமானுஜ ஜீயர் இந்துக்களை விமர்சிப்பவர்கள் குறித்து கடுமையாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் ஆண்டாள் தாயார் இல்லை என்றால் இந்த உலகமே கிடையாது. சனாதன தர்மம் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த மாநாடு ஒரு எடுத்துக்காட்டு. இன்று கோயில் வழிபாடுகளில் பெண்கள் அதிகளவில் கலந்து பங்கேற்பது சனாதன தர்மத்தின் எழுச்சியாகும். எந்த மதத்தையும் தாழ்வாகவோ இழிவாகவோ பேசக் கூடாது என்பது எங்கள் கருத்து.
அதே நேரம் சனாதன தர்மத்தையோ இந்து மதத்தையோ இழிவாக பேசுபவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக்காலமாக இந்து மதத்தையும் கடவுள்களையும் தப்பு தப்பாக பேசுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதைக் கண்டு இந்துக்கள் விழித்துக் கொண்டு சிங்கம்போல் சிலிர்த்து எழ வேண்டும் என்றார்.
பின்னணி என்ன?: சனாதனத்தை டெங்கு, மலேரியாவை ஒழிப்பது போல் ஒழித்து அழிக்க வேண்டும் என சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்களை பாஜகவினரும் இந்து முன்னணி அமைப்பினரும் தெரிவித்தனர். இதற்காக மன்னிப்பு கேட்குமாறு கோரிய நிலையில் அதற்கு அமைச்சர் உதயநிதி மறுத்தார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. சனாதனம் குறித்து பாஜக திமுகவுதக்கு எதிரே கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications