வெற்றி தரும் ஸ்ரீராமர்.. பட்டாபிஷேகம் படம் வைத்து பூஜை செய்தால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்
சென்னை: மகாவிஷ்ணு மனிதனாக அவதரித்து மானிடர்கள் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களையும் அனுபவித்தவர்.
ராமர் பட்டாபிஷேகம் புகைப்படம் வெற்றியின் குறியீடு. குடும்ப ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு. பட்டாபிஷேக ராமர் படத்தை நமது பூஜை அறையில் வைத்து தினசரியும் பூஜை செய்தால் நமது குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் வெற்றிகள் தேடி வரும் என்பது நம்பிக்கை.
அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும்.

ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் வாழ்ந்து காட்டிய ராமர், ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டியவர். ராமபிரான் எப்போது தனித்து இருந்ததில்லை குறைந்த பட்சம் சீதை,லட்சுமணருடன் இணைந்தே இருப்பார். பட்டாபிஷேகம் படத்தில் குடும்ப குரூப் போட்டோவாக இருக்கும்.
சீதையை இலங்கைக்கு கடத்திச்சென்ற ராவணனை வானர சேனை உதவியுடன் அனுமன் துணையோடு இலங்கை சென்று வதம் செய்து வெற்றி பெற்றார் ராமர். இது ஒரு கூட்டு முயற்சி. ராமர் மட்டுமே வெற்றியை வைத்துக்கொள்ளவில்லை. தம்பிகள், மனைவி, அனுமன் ஆகிய அனைவருக்குமே வெற்றியை பங்கிட்டு கொடுத்தார்.
குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் விதமாகத்தான் இன்றைக்கும் ராமர் தனது தம்பிகள், மனைவி, அனுமன் ஆகியோருடன் இணைந்த படம் வைத்து பூஜை செய்வது மரபாக இருக்கிறது. ராமர் வனவாசம் போன உடன் அவரது பாதுகையை வைத்து ஆட்சி செய்த பரதனின் தியாகம் சிறப்புக்கு உரியது. ராமர் வந்து தன்னை மீட்டுச்செல்வார் என்று காத்திருந்த சீதையின் காத்திருப்பு உண்மையானது.
அண்ணன் ராமனுடன் வனவாசம் சென்று இரவும் பகலும் உறங்காமல் காவல் காத்த லட்சுமணரின் தியாகம் யாராலும் ஈடு செய்ய முடியாதது. எனவே ராமரை வணங்கினால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும், சகோதர பாசம் அதிகரிக்கும், கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும், வெற்றிகள் தேடி வரும் என்பது நிச்சயம்.
நம்முடைய பூஜை அறையில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிக்கலாம். அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் இந்த நல்ல நாளில் நம்முடைய வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து ராமருக்கு பிடித்தமான வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவது சிறப்பு.












Click it and Unblock the Notifications