"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர
சென்னை: தமிழ்நாட்டில் இப்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. என்டிஏ தலைவர்கள் கூறும் கருத்துகள் தொடர்ந்து சர்ச்சையாகி வரும் சூழலில், மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே மீண்டும் ஒரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். அதாவது தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையைப் பெற்றாலும் கூட என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழக அரசியல் களம் தேர்தல் ஜூரத்தில் உள்ள சூழலில், மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் சமீபத்திய பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விஜய் பிரபல நடிகர் என்பதால் மக்களிடையே ஆதரவு இருந்தாலும் கூட அரசியல்வாதியாக அவர் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்றார். மேலும், தேர்தலில் அதிமுக பெரும்பான்மையைப் பெற்றாலும் கூட நிச்சயம் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறியுள்ளது விவாதமாக மாறியுள்ளது.

ராம்தாஸ் அத்வாலே
இது தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மை பெற்றது. ஆனாலும், கூட்டணி தர்மத்திற்கு மதிப்பளித்து நரேந்திர மோடி தலைமையிலான அரசு என்.டி.ஏ கூட்டணி அரசாகவே அமைந்தது. கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளித்து அவர்களை அரவணைத்துச் செல்வதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார். அதே ஃபார்முலா தான் இப்போது தமிழகத்திலும் எதிரொலிக்கப் போகிறது.. பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்பார்" என்கிறார்.
தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் கைகோர்த்துத் தேர்தலைச் சந்திக்கின்றன. கடந்த ஓராண்டுக்கு முன்பே இந்தக் கூட்டணி உறுதியானாலும், "வெற்றிக்குப் பிறகு அமையப்போவது அதிமுக ஆட்சியா அல்லது என்டிஏ கூட்டணி ஆட்சியா?" என்ற கேள்வி தொடர்கிறது.
குழப்பம்
ஒரு பக்கம் அதிமுக தலைவர்கள் தங்கள் நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருக்கிறார்கள். "பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை அதிமுகவே பெற்றுவிடும்; எனவே இது அதிமுக ஆட்சியாகத் தான் இருக்கும்" என அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால், தமிழகத்திற்குப் பிரச்சாரத்திற்கு வரும் பாஜக தேசியத் தலைவர்கள், "தமிழகத்தில் அமையப்போவது என்டிஏ அரசுதான்" என அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். சில நேரங்களில் அதிமுக என்ற பெயரைக் கூடச் சொல்லாமல் அவர்கள் கடந்து செல்வது, தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதின் நபின்
முன்னதாக பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினும் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்திருந்த பேட்டியில் கிட்டத்தட்ட இதே கருத்தைக் கூறியிருந்தார். அவர், "தமிழக தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கும். மாநிலம் முழுவதும் மாற்றத்திற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. நிச்சயமாகத் தமிழகத்தில் என்டிஏ அரசே அமையும்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி தலைவர்களின் இந்தப் பேச்சு, அதிமுகவின் 'தனித்து ஆட்சி' என்ற நம்பிக்கைக்கு நேர்மாறாக இருப்பதால், தொண்டர்களிடையே குழப்பம் தொடர்கிறது.
தமிழ்நாடு தேர்தல்
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து வரும் மே 4ம் தேதி கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களோடு தமிழ்நாட்டிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மாநிலத்தில் 234 தொகுதிகள் உள்ள சூழலில் 118 தொகுதிகளில் வெல்லும் கட்சியே ஆட்சியை அமைக்கும்!












Click it and Unblock the Notifications